முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கேரளாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை: வெள்ளம் - நிலச்சரிவில் 18 பேர் பலி - 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் : மீட்பு பணியில் முப்படைகள் தீவிரம்

ஞாயிற்றுக்கிழமை, 17 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

திருவனந்தபுரம் : கேரளாவில் 3 நாட்களாகப் பெய்து வரும் பலத்த மழை காரணமாகவும் நிலச்சரிவில் சிக்கியும் பலியானோர் எண்ணிக்கை 18ஆக உயர்ந்தது. அங்கு 48 மணி நேரத்திற்கு கன மழை பெய்யும் என்று அறிவித்து வானிலை மையம் 6 மாவட்டங்களுக்கு நேற்றும் ரெட் அலர்ட் விடுத்துள்ளது.

கேரளாவின் தென்கிழக்கு அரபிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு மையம் காரணமாக கடந்த 3 நாட்களாக கேரளா முழுவதும் பலத்த மழை பெய்து வருகிறது. கோட்டயம், மலப்புரம், ஆலப்புழா, இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர் மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்கியது. தொடர் மழை காரணமாக சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. ஆறுகளிலும் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. கேரளாவில் 16-ம் தேதி பெய்த மழை, கடந்த 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு ஏற்பட்ட பெருமழை வெள்ளத்தை நினைவுபடுத்தியதாக கேரள மக்கள் அச்சத்துடன் தெரிவித்தனர்.

மீட்பு பணிகள்

பலத்த மழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இடுக்கியில் நிலச்சரிவு ஏற்பட்டது. கூட்டுக்கல், பெருவந்தனம் கிராமங்களில் ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து விழுந்ததில், வீட்டில் இருந்தவர்கள் மண்ணுக்குள் புதைந்தனர். இந்த தகவல் அறிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்து சென்று அவர்களை மீட்டனர்.

நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்கும் பணி உடனடியாக நடந்தாலும் இன்னும் 22 பேரை காணவில்லை என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். அங்கு கடற்படை மற்றும் ராணுவத்தினர் மண்ணில் புதைந்தவர்களைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை தொடர்ந்து பெய்து வருவதால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. அங்கு வருவாய்த்துறை அதிகாரிகள் முகாமிட்டு உள்ளனர். அவர்கள் மீட்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர்.

கேரளாவில் ஏற்பட்ட நிலச்சரிவு மற்றும் மழைக்கு, கோட்டயம் மற்றும் இடுக்கியில் 2 பெண்களும் ஒரு குழந்தையும் இறந்தனர். இது போல தொடுபுழா அருகே அரக்குளம் ஆற்றுப் பாலத்தில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் சிக்கிய கார், அடித்துச் செல்லப்பட்டது. இதில் காரில் இருந்த பெண் உள்பட 2 பேர் பலியானார்கள். இதில் பெண்ணின் உடல் காணியாந்தோடு பகுதியில் மீட்கப்பட்டது. அவருடன் இருந்தவரின் உடலைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது. பத்தனம்திட்டா பகுதியிலும் மழைக்கு 2 பேர் பலியானார்கள். இவர்களையும் சேர்த்து மழைக்கு இதுவரை 18 பேர் பலியாகி உள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று அச்சம் ஏற்படுகிறது.

மேலும் ராணுவ ஹெலி காப்டர்களும் மோசமான வானிலை காரணமாக அந்தப் பகுதிகளுக்குச் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. நேற்று காலையில் மழை சற்று குறைந்ததும் பேரிடர் மீட்புக் குழுவினர் அங்கு சென்று நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்டு வருகிறார்கள்.

ரெட் அலர்ட் மாவட்டங்கள்

கேரளாவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதையடுத்து கோட்டயம், பத்தனம்திட்டா, திருச்சூர், இடுக்கி, எர்ணாகுளம், பாலக்காடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

இது போல இடுக்கி, மலம் புழா உள்பட மாநிலத்தில் உள்ள அனைத்து அணைகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து உள்ளதால், உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கேரளாவில் நிலைமை மோசமாக இருப்பதாக அம்மாநில முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். மக்களை காக்கும் பணியில் அரசு ஈடுபட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து