முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

9 மாவட்ட ஊரக ஊள்ளாட்சி தேர்தல்: வெற்றி பெற்றவர்கள் பதவி ஏற்றனர்

புதன்கிழமை, 20 அக்டோபர் 2021      அரசியல்
Image Unavailable

தமிழகத்தில் 9 மாவட்ட ஊரக ஊள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் மற்றும் ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் நேற்று பதவி ஏற்றனர்.

தமிழ்நாட்டில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் கடந்த 6 மற்றும் 9-ந்தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடந்தது. இதில் 153 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 1,420 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 3,002 கிராம ஊராட்சி தலைவர்கள், 23,185 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 

தி.மு.க. சார்பில் 139 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 982 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள் வெற்றி பெற்று இருந்தனர். காங்கிரசில் 9 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்களும், அ.தி.மு.க.வில் 2 உறுப்பினர்களும், இதர கட்சியினர் 3 பேரும் வெற்றி பெற்று இருந்தனர். இதே போல் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிகளில் அ.தி.மு.க.-212, காங்கிரஸ்-33, பா.ஜனதா-8, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு-4, இந்திய கம்யூனிஸ்டு-3, தே.மு.தி.க.-1, இதர கட்சியினர்- 177 பேர் வெற்றி பெற்று இருந்தனர்.

பஞ்சாயத்து தலைவர் தேர்தலில் பெரும்பான்மையான இடங்களில் தி.மு.க. வினர் வெற்றி பெற்று இருந்தனர். வெற்றி பெற்ற அனைவரும் நேற்று பதவி ஏற்றுக்கொண்டனர். இதற்காக ஒவ்வொரு மாவட்ட ஊராட்சி அலுவலகங்களிலும் பதவி ஏற்பு விழாவுக்கான ஏற்பாடுகள் விரிவாக செய்யப்பட்டு இருந்தன. மாவட்ட ஊராட்சி வார்டு கவுன்சிலருக்காக வெற்றி பெற்றவர்கள் மாவட்ட ஊராட்சி அலுவலகங்களில் அந்தந்த தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பதவி பிரமாணம் எடுத்துக்கொண்டனர்.

ஊராட்சி ஒன்றிய வார்டு கவுன்சிலர்களாக வெற்றி பெற்றவர்கள் அந்தந்த ஊராட்சி ஒன்றியத்தில் (பி.டி.ஓ. அலுவலகம்) தேர்தல் அதிகாரிகள் முன்னிலையில் பதவி ஏற்றனர். பஞ்சாயத்து தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் அந்தந்த ஊராட்சி மன்ற கூடத்தில் பதவி ஏற்றனர். அந்தந்த மாவட்டங்களில் நடைபெற்ற பதவி ஏற்பு விழாவில் எம்.எல்ஏ.க்கள், மாவட்ட செயலாளர்கள், உள்ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள், பிரமுகர்கள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டதால் ஒவ்வொரு பஞ்சாயத்து அலுவலகங்களும் நேற்று காலை முதலே கோலாகலமாக காணப்பட்டது.

பதவி ஏற்பு விழா நேற்று முடிவடைந்ததை முன்னிட்டு நாளை காலை 10 மணிக்கு மாவட்ட ஊராட்சி தலைவர், துணைத் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடக்கிறது. கவுன்சிலர்கள் ஓட்டு போட்டு தலைவர் மற்றும் துணைத் தலைவரை தேர்வு செய்வார்கள். இதே போல் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர், துணைத் தலைவர், பஞ்சாயத்து துணைத் தலைவர் பதவிகளுக்கும் நாளை (22-ந்தேதி) மறைமுக தேர்தல் நடைபெற உள்ளது. இதில் அதிக கவுன்சிலர்களின் ஆதரவை பெறுபவர்கள் தலைவராகவும், துணைத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். ஆனாலும் சமரச பேச்சுவார்த்தை மூலம் தலைவர், துணைத்தலைவரை தேர்ந்தெடுக்கும் முயற்சியில் கட்சி நிர்வாகிகள் ஈடுபட்டுள்ளனர்.

இளம் வயதில் பதவியேற்ற பெண்கள்

 

இளம் ஊராட்சி மன்றத் தலைவியாக தேர்ந்தெடுக்கப்பட்ட இளம் வயது பெண்கள் இருவர் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். தென்காசி மாவட்டத்தில் நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், தென்காசி மாவட்டம் வெங்கடாம்பட்டி ஊராசி மன்றத் தலைவியாக சாருகலா (22) என்பவர் போட்டியிட்டு வெற்றிபெற்றார். அதே போல் அனு (21) என்பவர் தெற்குமேடு ஊராட்சி மன்றத் தலைவியாக போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் இவர்கள் இருவரும் அந்தந்த ஊராட்சி அலுவலகத்தில் பதவியேற்றுக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து