முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

75 இடங்களில் கூடுதலாக அம்மா மருந்தகங்களை துவங்க நடவடிக்கை : தமிழக அரசு தகவல்

சனிக்கிழமை, 20 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் 75 இடங்களில் கூடுதலாக அம்மா மருந்தகங்களை துவங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இது குறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது, 

எதிர்க்கட்சி தலைவரின் 20-11-2021 தேதியிட்ட  அறிக்கையில் கூட்டுறவு சங்கங்கள் மூலம்  நடத்தப்பட்டு வரும் அம்மா மருந்தகங்களை  தமிழக அரசு மூடி வருவதாக  முற்றிலும் தவறான ஒரு குற்றச்சாட்டை சுமத்தியுள்ளார்.  கூட்டுறவு சங்கங்களின் மூலம் தமிழக அரசு 131 அம்மா மருந்தகங்களையும், 174 கூட்டுறவு மருந்தகங்களையும் ஆக மொத்தம் 305 மருந்தகங்களை  நடத்தி வருகிறது.    

இந்த அரசு பொறுப்பேற்றவுடன் ஏற்கெனவே இயங்கி வந்த  அம்மா மருந்தகங்கள்  எதுவும் மூடப்படவில்லை.  மாறாக,  அவற்றின் எண்ணிக்கை அதிகரிக்கப்படுள்ளது.  கடந்த ஆண்டு இயங்கி வந்த அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை  126-லிருந்து 131-ஆக  இந்த அரசால் உயர்த்தப்பட்டுள்ளது.  

கூட்டுறவு சங்கங்கள் மூலம் நடத்தப்பட்டு வரும் மருந்தகங்கள் அனைத்தும்  20 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில்  மருந்து மாத்திரைகளை விற்பனை செய்து வருவதால்,  ஏழை, எளிய மக்கள் பெருமளவில் பயன் பெற்று வருகின்றனர் என்பதனை இந்த அரசு நன்கு உணர்ந்துள்ளது.  அவ்வாறு உணர்ந்ததனாலேயே  அம்மா மருந்தகங்களின் எண்ணிக்கை உயர்த்தப்பட்டிருப்பதோடு மட்டுமல்லாமல்  கூட்டுறவு மருந்தகங்களின் எண்ணிக்கையும்  ஆண்டொன்றுக்கு  60 புதிய மருந்தகங்கள் என்கிற அடிப்படையில்  அடுத்த 5 ஆண்டுகளில்  300 புதிய கூட்டுறவு மருந்தகங்களை  புதியதாக துவக்குவதற்கு கடந்த சட்டப்பேரவை கூட்டத் தொடரில்  முதல்வரால் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.   

இதன் அடிப்படையில்  நடப்பு வருடத்தில்,  நிர்ணயிக்கப்பட்ட 60 என்கிற எண்ணிக்கையைவிட கூடுதலாக  75 மருந்தகங்கள்  தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில்  கீழ்க்கண்டவாறு  துவங்குவதற்கு  நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதன்படி, புதுக்கோட்டை, திண்டுக்கல், ஈரோடு, மதுரை, தேனி, திருநெல்வேலி, திருவள்ளூர், வேலூர், இராணிப்பேட்டை, செங்கல்பட்டு, இராமநாதபுரம், திருச்சி,  காஞ்சிபுரம், விருதுநகர், தஞ்சாவூர், கன்னியாகுமரி, மயிலாடுதுறை, பெரம்பலுர், சிவகங்கை, அரியலுர், கடலுர், கிருஷ்ணகிரி, நாகப்பட்டினம், சேலம், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவாரூர்,  துத்துக்குடி, தென்காசி, திருப்பத்துர், கோவை, கரூர் ஆகிய மாவட்டங்களில் தலா 2 இடங்களிலும்,  சென்னை மாவட்டத்தில் 4 இடங்களிலும்,  தருமபுரி, நாமக்கல், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் தலா ஒரு இடத்திலும் என மொத்தம் 75 இடங்களில்  மருந்தகங்கள் துவங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 

131 அம்மா மருந்தகங்கள் மூலம் நடப்பு ஆண்டில் 31.10.2021 வரை  ரூ. 44.88 கோடிக்கு வர்த்தகமாகியுள்ளது.   அதே போல 174 கூட்டுறவு மருந்தகங்கள் மூலம்  ரூ. 48.21 கோடிக்கு விற்பணையாகியுள்ளது.    ஆக மொத்தம் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நடத்தப்படும் 305 அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள்  மூலம்  ரூ.93.09 கோடிக்கு  இந்த ஆண்டில் 31.10.2021 வரை வர்த்தகமாகியுள்ளது.   

மேலும்,  அம்மா மற்றும் கூட்டுறவு மருந்தகங்கள் மூலம்  கொள்முதல் செய்யப்படும் மருந்து மாத்திரைகளை மையப்படுத்தி  கொள்முதல் செய்வதன் மூலம்  மருந்து மாத்திரைகளின் விற்பனையை  அதிகரிப்பதற்கும்,  அதன் மூலம்  மேலும் ஆயிரக்கணக்கான ஏழை, எளிய  மக்கள்  பலன் பெறுவதற்கும்  கூட்டுறவுத்துறை  ஆக்கப்பூர்வமான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து