முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியவர்கள் தடுப்பூசி எடுக்க தயங்குவது மன்னிக்க முடியாதது: புதுவை கவர்னர் தமிழிசை பேட்டி

சனிக்கிழமை, 8 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

புதுச்சேரியில் சிறுவர்கள் தயக்கமின்றி தடுப்பூசி செலுத்திக் கொள்கின்றனர். பெரியவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் இருப்பது மன்னிக்க முடியாதது. பள்ளிகளில் மாணவர்கள் பாதுகாப்பாக இருக்கின்றனர். அதில் பிரச்சனை ஏதேனும் வந்தால் பள்ளிகள் மூடுவது குறித்து பரிசீலனை செய்வோம்" என புதுவை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரியில் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவலை முற்றிலுமாகக் கட்டுப்படுத்தும் நோக்கில் 15 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. சுகாதாரத் துறை மூலம் பள்ளிகளில் தடுப்பூசி முகாம்கள் நடப்படுகிறது. அதன் ஒரு பகுதியாக வானரப்பேட்டையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் நடைபெறும் தடுப்பூசி முகாமினை துணைநிலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று (ஜன.8) தொடங்கி வைத்தார். தொடர்ந்து துணைநிலை கவர்னர் முன்னிலையில் மாணவர்களுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் கவர்னர் தமிழிசை பேசுகையில், ‘‘சட்டப்பேரவை உறுப்பினர்கள் அவரவர் தொகுதியில் முழுவதுமாக தடுப்பூசி செலுத்துவதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். அனைத்து சட்டப்பேரவை உறுப்பினர்களும் அந்த முயற்சியை முன்னெடுத்துச் செல்கிறார்கள். அவர்களைப் பாராட்டுகிறேன் என்றார்.

நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் கவர்னர் தமிழிசை கூறும்போது, ‘‘குழந்தைகள் தடுப்பூசி பற்றி புரிந்துகொண்டு தயக்கம் இல்லாமல் போட்டுக்கொள்கிறனர். பெரியவர்கள் தடுப்பூசி போடாமல் இருப்பது மன்னிக்க முடியாதது. ஆப்பிரிக்காவில் கொரோனா அதிகரிக்க காரணம் தடுப்பூசி அதிகம் போடாடததுதான் என்ற உண்மையை தெரிந்து கொள்ள வேண்டும். மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வற்புறுத்தப்படுகிறது. தடுப்பூசி போட்டவர்களை எந்த வகை கொரோனாவும் அபாயகரமாக தாக்குவதில்லை என்பது அறிவியல் ஆராய்ச்சி.

புதுச்சேரி முதல்வரும் தடுப்பூசியை ஊக்கப்படுத்தி வருகிறார். புதுச்சேரி 100 சதவீத தடுப்பூசியை நோக்கி போய் கொண்டிருக்கிறது. தற்போது 75 சதவீதம் முதல் தவணையும், 50 சதவீதத்துக்கும் மேல் இரண்டாவது தவணையும் போடப்பட்டிருக்கிறது. தடுப்பூசி போடாமல் இருக்கின்ற ஒரு லட்சம் பேரும் சூழ்நிலையைப் புரிந்துகொள்ள வேண்டும். புதுச்சேரி மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே அரசின் நோக்கம். அனைவரும் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அக்கறை அரசுக்கு உண்டு என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து