முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நெல்லையில் 6-வது நாளாக நீடித்த மீட்பு பணிகள்: கல்குவாரி விபத்தில் தேடப்பட்ட உரிமையாளர்கள் 2 பேர் கைது

வெள்ளிக்கிழமை, 20 மே 2022      தமிழகம்
Selvaraj-Kumar 2022-05-20

Source: provided

நெல்லை : நெல்லை கல்குவாரி விபத்தில் தேடப்பட்டு வந்த உரிமையாளர் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரை தனிப்படையினர் கைது செய்துள்ளனர். இதனிடையே மேலும் ஒருவரின் சடலத்தை மீட்கும் பணி நேற்று 6-வது நாளாக தொடர்ந்தது.

திருநெல்வேலி மாவட்டம், முன்னீர்பள்ளம் அருகே அடைமிதிப்பான்குளத்தில் உள்ள தனியார் கல்குவாரியில் கடந்த சனிக்கிழமை இரவு (மே 14) பாறைகள் சரிந்து விழுந்ததில், பணியிலிருந்த இளையார்குளம் கிராமத்தைச் சேர்ந்த செல்வம் (25), ஆயன்குளம் முருகன் (25), விட்டிலாபுரம் முருகன் (31), காக்கைக்குளம் செல்வகுமார் (30), நாட்டார்குளம் விஜய் (25), தச்சநல்லூர் ஊருடையான்குடியிருப்பு ராஜேந்திரன் (42) ஆகியோர் கற்குவியலுக்குள் சிக்கினர். மீட்புப் பணியில் பாளையங்கோட்டை, நான்குனேரி தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டனர். விட்டிலாபுரம் முருகன், விஜய், செல்வம் ஆகிய 3 பேர் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டு திருநெல்வேலி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு செல்வம் இறந்தார். ஆயன்குளம் முருகன், செல்வகுமார் ஆகியோர் சடலங்களாக மீட்கப்பட்டனர். 

இந்த நிலையில், கடைசி நபரும், 6-வது நபருமான ஓட்டுநர் ராஜேந்திரனை மீட்கும் பணி நேற்று முன்தினம் காலை முதல் நடைபெற்று வருகிறது. அவர் உடல் இருக்கும் பகுதியை அடையாளம் காண்பதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வந்தது. துர்நாற்றம் வீசும் இடங்களில் தீயணைப்பு மீட்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 6 -வது நபருமான ராஜேந்திரனை தேடும் பணி நேற்று 6-வது நாளாக வெள்ளிக்கிழமையும் தொடர்ந்து நடைபெற்றது. இதற்கிடையே ஒரு குறிப்பிட்ட பாறைக்கு அடியில் துர்நாற்றம் வீசுவது கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் அந்தப் பாறையை வெடிவைத்து தகர்த்து உடலை மீட்கலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதனை அடுத்து பாறையில் 32-க்கும் மேற்பட்ட இடங்களில் துவாரங்கள் போடப்பட்டு அதில் வெடி மருந்துகள் செலுத்தப்படவுள்ளன. ஒரு கிலோவிற்கும் அதிகமான வெடி மருந்து பாறையில் வைக்கப்பட்டு தகர்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து பாறைகளை அகற்றி விட்டு உடலை மீட்கும் பணி நடைபெறும் பாறை வெடிவைத்து தகர்க்கப்பட இருப்பதால் குவாரியின் 500 மீட்டர் சுற்றளவிற்குள் யாரும் நுழைய கூடாது என காவல்துறையினர் உத்தரவு பிறப்பித்துள்ளனர். ஒலிபெருக்கி மூலமாக தொடர்ந்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றனர். 

இதனிடையே கல்குவாரி விபத்து தொடர்பாக நான்குனேரி காவல் உதவி கண்காணிப்பாளர் ரஜத் சதுர்வேதி தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதுவரை இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தலைமறைவாக இருந்த குவாரி உரிமையாளர்கள் செல்வராஜ், அவரது மகன் குமார் ஆகியோரை போலீஸார் தேடி வந்தனர்.

மேலும், செல்வராஜின் வங்கிக் கணக்கு முடக்கப்பட்டு, திசையன்விளையில் உள்ள அவரின் வீடு, அலுவலகம் ஆகியவற்றில் வியாழக்கிழமை சோதனை நடைபெற்றது. இதில், முக்கிய ஆவணங்களை போலீஸார் கைப்பற்றியதாகத் தெரிகிறது. இந்நிலையில், தலைமறைவாக இருந்த செல்வராஜ், குமார் ஆகிய இருவரையும் கர்நாடக மாநிலம் மங்களூருவில் தனிப்படை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து