முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இலங்கையில் இதுவரை இல்லாத அளவு பெட்ரோல் லிட்டர் ரூ.420-ம், டீசல் ரூ.400 ஆகவும் உயர்வு

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      உலகம்
Petrol-Diesel 2022-05-23

Source: provided

கொழும்பு :  இலங்கையில் நேற்று ஒரே நாளில் பெட்ரோல் விலை 24.3 வீதமும், டீசல் விலை 38.4 சதவீதமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்வு என்பது இதுவரை இல்லாத ஒன்றாகும்.

கொரோனா பெருந்தொற்றுக்குப் பிறகு இலங்கை பெரிய அளவில் பொருளாதார பாதிப்பை சந்தித்து வருகிறது. இலங்கைக்கு வந்து கொண்டிருந்த அந்நியச் செலாவணி வரத்து கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இலங்கையின் நாணயம் பெரிய அளவில் மதிப்பிழந்து விட்டது. இதனால் கடுமையான எரிபொருள் பற்றாக்குறை நிலவுகிறது. நிலக்கரி வாங்க பணம் இல்லாததால் இலங்கையில் தினமும் 15 மணி நேரம் மின்வெட்டு அமலில் உள்ளது. பெட்ரோல், டீசல் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது.

அந்நியச் செலாவணியை செலுத்த முடியாத சூழலில் இலங்கை உள்ளது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் இலங்கைக்கு இந்தியா பெட்ரோல், டீசல் வழங்கி வருகிறது. இந்திய மட்டுமின்றி வேறு பல நாடுகளிலும் பெட்ரோலியப் பொருட்களை இலங்கை வாங்கி வருகிறது. இதனால் மீண்டும் பெட்ரோல், டீசலுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இந்தநிலையில் அந்நாட்டில் பெட்ரோல் டீசல் விலை நேற்று மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. பெட்ரோல் விலை 24.3 வீதமும், டீசல் விலை 38.4 சதவீதமும் ஒரே நாளில் அதிகரிக்கப்பட்டுள்ளது. இது எப்போதும் இல்லாத உயர்வாகும். ஏப்ரல் 19 ஆம் தேதி விலை உயர்ந்த்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் அந்நாட்டில் எரிபொருள் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

அங்கு அதிகம் பயன்படுத்தப்படும் ஆக்டோன் 92 பெட்ரோல் ஒரு லிட்டர் இலங்கை ரூபாய் மதிப்பில் பெட்ரோல் விலை 420 ரூபாயும் (1.17 அமெரிக்க டாலர்) டீசல் 400 ரூபாயும் (1.11 அமெரிக்க டாலர்) உயர்த்தப்பட்டள்ளது.  

இதுகுறித்து மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர ட்விட்டரில் வெளியிட்டுள்ள பதிவில் கூறுகையில் ‘‘எரிபொருள் விலை இன்று (நேற்று) அதிகாலை 3 மணி முதல் மாற்றப்பட்டுள்ளது. அமைச்சரவையின் அங்கீகாரம் பெற்ற குழு எரிபொருள் விலை உயர்வுக்கு அனுமதி வழங்கப்பட்ட பிறகு இந்த விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளது.

உயர்வை கணக்கில் கொண்டு விலை திருத்தம் செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு ஏற்ப போக்குவரத்து மற்றும் இதர சேவைக் கட்டணங்களை உயர்த்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இறக்குமதி செலவு, இறக்குமதி செய்து நிலையங்களுக்கு விநியோகம் செய்யும் செலவு, வரி உள்ளிட்டவை இதில் அடங்கும். ஒவ்வொரு பதினைந்து நாட்களுக்கும் அல்லது மாதந்தோறும் விலையை மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம்’’ எனக் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து