முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அ.தி.மு.க பொதுக்குழு விவகாரம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரும் திங்கட்கிழமை விசாரணை: ஐகோர்ட்

வியாழக்கிழமை, 30 ஜூன் 2022      தமிழகம்
Chennai-High-Court 2021 3

அ.தி.மு.க பொதுக்குழுக் கூட்டம் தொடர்பான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை வரும் ஜூலை 4-ம் தேதியன்று (திங்கட்கிழமை) விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அ.தி.மு.க பொதுக்குழு கூட்டம் ஜூன் 23-ம் தேதி சென்னை வானகரத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் ஏற்கெனவே முடிவு செய்யப்பட்ட 23 தீர்மானங்கள் தவிர புதிய முடிவுகள் எடுக்க தடை கோரி பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி, பொதுக்குழு கூட்டத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதை இந்த நீதிமன்றம் ஊகித்து முன்கூட்டியே உத்தரவு பிறப்பிக்க முடியாது என்றும் கட்சி மற்றும் சங்க விவகாரங்களில் நீதிமன்றம் பொதுவாக தலையிடுவது இல்லை எனக்கூறி பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டார்.

இந்த உத்தரவை எதிர்த்து சண்முகம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை நீதீபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் அமர்வு விசாரித்தது. அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், திட்டமிட்டபடி பொதுக்குழு நடத்தலாம், அதில் 23 தீர்மானம் மட்டும் நிறைவேற்றலாம், மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாமே தவிர எந்த முடிவும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து ஜூன் 23-ம் தேதி நடைபெற்ற பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களும் நிராகரிக்கப்படுவதாக பொதுக்குழு உறுப்பினர் சி.வி.சண்முகம் அறிவித்தார்.

மேலும், நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானத்தை இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி முன்மொழிந்தார். அதனை, பொதுக்குழு உறுப்பினர்கள் டி.ஜெயக்குமார் மற்றும் திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் வழிமொழிந்தனர். அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என தமிழ்மகன் உசேன் அறிவித்தார்.

இதையடுத்து, நீதிமன்ற உத்தரவை மீறி ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்ட பொதுக்குழு கூட்டத்துக்கு தடை கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் சண்முகம் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், உயர் நீதிமன்ற உத்தரவை வேண்டுமென்றே அவமதித்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் சி.வி.சண்முகம், டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன், கே.பி.முனுசாமி, அவை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழ் மகன் உசேன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும்.

அதேபோல, பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவைத் தலைவராக தமிழ்மகன் உசேனை நியமிக்கும் தீர்மானத்தை முன்மொழிந்த இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அதை வழிமொழிந்த டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோரை நீதிமன்ற அவமதிப்பு வழக்கின் கீழ் தண்டிக்க வேண்டும்.

தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்டதே நீதிமன்ற அவதிப்பாக உள்ளபோது, அடுத்தப் பொதுக்குழு ஜூலை 11-ம் தேதி நடைபெறும் என அவர் அறிவித்தது மன்னிக்க முடியாத செயலாகும்.இது நீதிமன்ற உத்தரவை மீறுவதற்கான சதித்திட்டத்தை வெளிப்படுத்துகிறது. நிரந்தர அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் நியமிக்கப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும்.

கட்சி விதிகளின்படி ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து பொதுக்குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்காததால், ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழுக் கூட்டம் நடத்தவும் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கை அவசர வழக்காக விசாரணைக்கு எடுக்கக் கோரி நீதிபதிகள் துரைசாமி மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் , சண்முகம் தரப்பில் நேற்று முறையீடு செய்யப்பட்டது. இதுதொடர்பான மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட உயர்நீதிமன்றம், ஜூலை 11 ம் தேதி நடைபெற இருந்த அ.தி.மு.க பொதுக்குழுவுக்கு தடை விதிக்க மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், நீதிமன்ற அவமதிப்பு வழக்கை மட்டும் ஜூலை 4-ம் தேதி விசாரிக்க உயர்நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து