முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கருணாநிதி நினைவு மாரத்தான் போட்டிக்கான பதிவு கட்டணம்: எழும்பூர் அரசு மருத்துவமனைக்கு வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2022      தமிழகம்
CM-4 2022-08-07

Source: provided

சென்னை : முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு அமைச்சர் மா.சுப்பிரமணியனின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டியில் பெறப்பட்ட பதிவு கட்டணத் தொகை ரூ.1,20,69,980/-  முழுவதையும், எழும்பூர் அரசு குழந்தைகள் மற்றும் தாய் சேய் நல மருத்துவமனைக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவு நாளை முன்னிட்டு  நேற்று பெசன்ட் நகர், ஆல்காட் பள்ளி வளாகத்தில், அமைச்சர் மா.சுப்பிரமணியனின்  ஏற்பாட்டில் கலைஞர் நினைவு பன்னாட்டு மாரத்தான் போட்டி நடைபெற்றது.  இந்த போட்டிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ. வேலு, சிவ. மெய்யநாதன், உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

இந்தியாவில் இதுவரை எந்த மாரத்தானிலும் இல்லாத அளவுக்கு 43,320 பேர் பதிவு செய்து கலந்து கொண்டனர். இதில் 10,985 பேர் பெண்கள். இந்த மாரத்தான் ஓட்டத்தில் பதிவுக்கட்டணமாக பெறப்பட்ட ரூ.1,20,69,980/- தொகையை மக்கள் நல்வாழ்வுத் துறை முதன்மைச் செயலாளர்                      செந்தில் குமாரிடம் முதல்வர் மு.க. ஸ்டாலின் ஒப்படைத்தார்.  தொகை முழுவதையும், எழும்பூர் அரசு குழந்தைகள் மற்றும் தாய் சேய் நல மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டு, ஏழைக் குழந்தைகளின் மருத்துவப் பயன்பாட்டிற்காக இந்நிதி செலவிடப்படும்.  மாராத்தான் போட்டியில் வெற்றி பெற்ற மாற்றுத்திறனாளிகளுக்கு பரிசுகளை முதல்வர் வழங்கினார். 

ஆசியாவிலேயே மிகப்பெரிய நினைவு மாரத்தானாக அங்கீகரிக்கப்பட்டதற்கான சான்றிதழை ஆசியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் நிறுவனம் முதல்வரிடம் வழங்கினர்.   மேலும் போட்டிகளில் வென்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டது. 

மாரத்தான் போட்டியில் பங்கேற்ற முக்கிய பிரமுகர்களான தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு, இங்கிலாந்து நாட்டின் அமீஸ்புரி நகரின் துணை மேயர் மோனிகா தேவேந்திரன், இரண்டு கண் பார்வையிழந்த பஞ்சாபை சேர்ந்த வீரர் சாவ்லா ஆகியோர்களுக்கு முதல்வர் சிறப்பு செய்து சான்றிதழ்களை வழங்கினார். மேலும், அமெரிக்கா, பிரிட்டிஷ், ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிநாட்டு துணைத் தூதர்கள் மற்றும் மாராத்தான் போட்டிக்கு நன்கொடை அளித்த நன்கொடையாளர்களுக்கும் முதல்வர் சிறப்பு செய்து நினைவுப் பரிசுகளை வழங்கினார்.  

இந்நிகழ்வில் அமைச்சர்கள் பொன்முடி, இரகுபதி, கே.ஆர்.பெரியகருப்பன், செஞ்சி கே.எஸ்.மஸ்தான், அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சிவ.வீ.மெய்யநாதன், என்.கயல்விழி செல்வராஜ், நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர்.பாலு, தமிழச்சி தங்கப்பாண்டியன், சேப்பாக்கம் திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின், சட்டமன்ற உறுப்பினர்கள் காரப்பாக்கம் கணபதி, எஸ்.அரவிந்த் ரமேஷ், பிரபாகரராஜா, அமெரிக்கா, பிரிட்டிஷ், ஜப்பான், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் வெளிநாட்டு துணைத் தூதர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து