முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2-ம் படை வீடான திருச்செந்தூரில் சூரனை சம்ஹாரம் செய்த ஜெயந்திநாதர் இன்று திருக்கல்யாண வைபோகம்

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2022      ஆன்மிகம்
Teacher-1 2022-10-30

Source: provided

திருச்செந்தூர் : வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்கான பக்தர்களின் கோஷம் விண்ணதிர, திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் சூரனை சுவாமி ஜெயந்திநாதர் சம்ஹாரம் செய்த நிகழ்ச்சி நடைபெற்றது. 

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் கந்தசஷ்டி திருவிழா சிறப்பாக கொண்டாடப்படும். கோவிலில் இந்த ஆண்டு கந்தசஷ்டி திருவிழா கடந்த 25-ம் தேதி யாகசாலை பூஜையுடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் அதிகாலையில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. காலையில் உச்சிகால அபிஷேகம், தீபாராதனைக்கு பின்னர் யாகசாலையில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரமாகி தீபாராதனை நடைபெற்றது. மதியம் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி- தெய்வானையுடன் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளினார். மாலையில் திருவாவடுதுறை ஆதீன கந்தசஷ்டி மண்டபத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது.

இரவில் சுவாமி-அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரி வீதி வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவின் சிகர நிகழ்ச்சியான சூரசம்ஹாரம், 6-ம் நாளான நேற்று நடைபெற்றது. இதை முன்னிட்டு நேற்று அதிகாலை ஒரு மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை, 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. காலை 9 மணிக்கு உச்சிகால அபிஷேகம், மதியம் ஒரு மணிக்கு சாயரட்சை தீபாராதனை நடைபெற்றது. 

அதை தொடர்ந்து மாலை 4 மணியளவில் சுவாமி ஜெயந்திநாதர் சூரசம்ஹாரத்துக்கு எழுந்தருளினார். சூரசம்ஹாரத்திற்காக சுவாமி ஜெயந்திநாதர் கடற்கரைக்கு வருகை தந்தார். பின்னர் முதலாவதாக யானை முகம் கொண்ட தாரகாசுரனை சுவாமி ஜெயந்திநாதர் வதம் செய்தார். இரண்டாவதாக, சிங்க முகம் கொண்ட சிங்கமுகாசுரனை சுவாமி ஜெயந்திநாதர் வேலால் வதம் செய்த நிகழ்வு நடைபெற்றது. தொடர்ந்து, தலையை ஆட்டியபடி முருகனுடன் போரிட வந்தான் சூரபத்மன். பின்னர் தன்முகத்தோடு எழுந்தருளிய சூரபத்மனை வதம் செய்தார் சுவாமி ஜெயந்திநாதர். அப்போது அங்கு குழுமியிருந்த லட்சக்கணக்கான பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என கோஷம் எழுப்பினர். 

மாமரமாகவும், சேவலாகவும் மாறி முருகனுடன் போரிட வந்தான் சூரபத்மன். சூரனை சம்ஹாரம் செய்து சேவற்கொடியாகவும், மயிலாகவும் ஜெயந்திநாதர் ஆட்கொண்டார். விழாவையொட்டி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் மேற்பார்வையில், திருச்செந்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆவுடையப்பன் மேற்பார்வையில் சுமார் 2,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

இன்று 7-ம் நாளன்று இரவு சுவாமி குமரவிடங்க பெருமானுக்கும், தெய்வானை அம்பாளுக்கும் திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. தொடர்ந்து நவம்பர் 5-ம் தேதி வரை கந்தசஷ்டி விழா நடைபெறுகிறது. இந்த விழாவையொட்டி திருநெல்வேலியில் இருந்து சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டன. தூத்துக்குடி, மதுரை, நெல்லை ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்களும் இயக்கப்பட்டன. இதே போல் மருதமலை, பழனி உள்ளிட்ட இடங்களிலும் சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து