முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் உலகத்தரத்தில் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 2 ஜூன் 2023      தமிழகம்
CM-3 2023-06-02

Source: provided

சென்னை : சென்னையில்  25 ஏக்கர் பரப்பளவில் 5,000 பேர் அமரும் வகையில் உலக தரத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர்  கருணாநிதியின் பிறந்த நாள் இன்று (ஜூன் 3-ம் தேதி) கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், சென்னை கலைவாணர் அரங்கில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா தொடக்க நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு கருணாநிதி நூற்றாண்டு விழா லோகோ (இலச்சினை) வெளியிட்டார். அதனை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மகாத்மா காந்தியின் பேரனும், மேற்குவங்க முன்னாள் ஆளுநருமான கோபாலகிருஷ்ண காந்தி பெற்றுக்கொண்டார். இதை தொடர்ந்து விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது,

நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பி என்றால் அது கருணாநிதி தான். தமிழ் சமூகத்திற்கு உயிராக இருந்தவர் கருணாநிதி. கருணாநிதி வகுத்த வழியில் தான் தமிழகத்தில் அனைத்து துறைகளும் இயங்குகின்றன. மக்கள் மனங்களில் இன்றும் ஆட்சி செய்கிறார் கருணாநிதி. 

திராவிட மாடல் அரசின் புகழை முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு காணிக்கையாக்குகிறேன். 50 ஆண்டு காலத்தின் தமிழகத்தில் வளர்ச்சிக்கு அடித்தளம் இட்டவர் கருணாநிதி. கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஆண்டு முழுவதும் கொண்டாட அரசு முடிவு செய்துள்ளது. கருணாநிதி தி.மு.க.வின் சொத்து அல்ல, உலக தமிழர்களின் சொத்து. 

 நூற்றாண்டு விழா கருணாநிதி புகழ்பாடும் விழாவாக மட்டுமல்லாமல், தமிழ் சமுதாயத்திற்கு அவர் செய்தவற்றை நினைவுப்படுத்தும் விழாவாக இருக்கும். சென்னையில் டைடல் பார்க்கை உருவாக்கி தகவல் தொழில் புரட்சியை ஏற்படுத்தியவர் கருணாநிதி. பெரியாரின் கொள்கை வாரிசான கருணாநிதியை வாழ்த்துவதற்காக காந்தியின் பேரன் வந்துள்ளார். 

பெரியார் சுய மரியாதை இயக்கத்தை துவங்கும் முன் காந்தியின் தொண்டராக தான் இருந்தார். கோட்சேவால் காந்தி சுட்டு கொல்லப்பட்ட போது பெரியார் அடைந்த வேதனை வார்த்தைகளால் விவரிக்க முடியாது. 

சென்னையில்  25 ஏக்கர் பரப்பளவில் 5,000 பேர் அமரும் வகையில் உலக தரத்தில் கலைஞர் பன்னாட்டு அரங்கம் அமைக்கப்படும். பன்னாட்டு மாநாடுகள், திரைப்பட விழாக்கள் எல்லாம் அங்கு நடைபெறும். சிங்கப்பூர் ஜப்பான் சுற்றுப்பயணத்தின் போது இந்த எண்ணம் உதயமானது. 

மிக பிரம்மாண்டமான முறையில் கலைஞர் கன்வென்சன் சென்டர் அமையவுள்ளது. ஜப்பான், சிங்கப்பூரில் மேற்கொண்ட பயணத்தில் ஏராளமான முதலீடுகளை ஈர்த்துள்ளேன். இந்தியாவில் தொழில் தொடங்கினால், தமிழகத்தில் தான் முதலீடு செய்வோம் என்று நிறுவனங்கள் உறுதியளித்துள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து