முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வரின் துரித நடவடிக்கை:இன்று முதல் மின்வெட்டு குறைப்பு

திங்கட்கிழமை, 27 பெப்ரவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, பிப். - 27 - தமிழகத்தின் மாவட்டங்களில் நிலவி வந்த மின்வெட்டு பாதியாக குறைக்கப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மின்வெட்டு 2 மணி நேரமாக அதிகரிக்கப்படுகிறது. இந்த புதிய நடைமுறை இன்று திங்கட்கிழமை முதல் அமலுக்கு வருகிறது.  தமிழகத்தில் மின் தேவையின் அளவு 11,500 மெகாவாட்டில் இருந்து 12 ஆயிரத்து 500 மெகாவாட்டாக உள்ளது. மாநிலத்தின் மின் உற்பத்தி நிலையங்கள் மத்திய மின் தொகுப்பு மற்றும் இதர இனங்களில் இருந்து பெறப்படும் மின்சாரத்தின் அளவு 8 ஆயிரத்து 500 மெகாவாட் ஆகும்.
இதனால் சுமார் 3 ஆயிரம் முதல் 4 ஆயிரம் மெகாவாட் அளவுக்கு மின் தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த தட்டுப்பாட்டை சமாளிக்க மின்சார கட்டுப்பாடு முறைகள் மாநிலம் முழுவதும் அமல்படுத்தப்பட்டு வருகிறது. சென்னையில் ஒரு மணி நேரமும், மாநிலத்தின் பிற மாவட்டங்களில் 6 மணி நேரத்துக்கும் அதிகமாகவும் மின்வெட்டு அமலில் உள்ளது. இந்த மின்வெட்டால் தொழிற்கூடங்கள் உற்பத்தி பாதிப்பை கடுமையாக சந்தித்து வருகின்றன. இதனால் தொழிலாளர்கள் வேலையிழக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் மின்வெட்டின் அளவை சீராக்க வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து இருந்தனர்.  இந்த நிலையில் மாநிலத்தின் நிலவும் கடுமையான மின் தட்டுப்பாட்டை சமாளிக்க மின்வெட்டு முறையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளது தமிழ்நாடு மின்வாரியம். இது குறித்து வாரியம் வெளியிட்ட அறிவிப்பில், மின்தட்டுப்பாட்டு பிரச்சினையை எதிர்கொள்வதற்காக பல்வேறு உத்திகளை மின் உபயோகிப்பாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினை குறித்து தமிழக அரசு தீவிரமாக ஆராய்ந்து மின்வாரிய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது.  மாநிலத்தின் மின் தேவை ஆண்டுக்கு 10 சதவீதத்துக்கும் மேலாக உயர்ந்து வருகிறது. எனவே பல்வேறு தரப்பினர் அளித்த யோசனைகளின் பேரிலும் அவற்றை செயல்படுத்தும் வழிவகைகளை கொண்டும் சில மின் விநியோக கட்டுப்பாட்டு முறைகளை திங்கட்கிழமை முதல் நடைமுறைக்கு கொண்டு வரப்படுகின்றன. அதன்படி தொழிற்சாலை மற்றும் வணிக மின் பயனீட்டாளர்களுக்கு 40 சதவீத மின்வெட்டும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு 2 மணி நேர மின்தடையும், மற்ற நகர மற்றும் ஊரக பகுதிகளுக்கு 4 மணி நேர மின்வெட்டும், வணிக பயனீட்டாளர்களுக்கு மாலை உச்ச நேர மின் பயனீட்டு கட்டுப்பாடு அமலில் இருக்கும். இந்த மின் கட்டுப்பாடு முறைகள் தேவைக்கேற்ப அமல்படுத்தப்படும். மின் தேவையின் இடைவெளியை பொறுத்து மின்வெட்டின் அளவும் அவ்வப்போது மாற்றியமைக்கப்படும். உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளுக்கு தேர்வு நடைபெறும் நேரம் என்பதால் அந்த நேரங்களில் முடிந்த அளவுக்கு தடையின்றி மின்சாரம் கிடைப்பதற்கு வழிவகைகள் செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்