முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோடைகால விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்பட்டன

வெள்ளிக்கிழமை, 1 ஜூன் 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூன்.2 - கோடைகால விடுமுறை முடிந்து நேற்று பெரும்பாலான பள்ளிகள் திறக்கப்பட்டன.  புதிய வகுப்புகளுக்கு மாணவர்களும், மாணவிகளும் உற்சாகத்தோடு சென்றனர். தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கு கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வாரத்தில் கோடை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 55 ஆயிரம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. நேற்றோடு கோடை விடுமுறை முடிவடைந்த நிலையில்  தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. நேற்று முதல் பள்ளிகள் வழக்கம் போல செயல்பட துவங்கின. இதனால் கடந்த ஒரு மாதமாக காலை நேரங்களில் வெறிச்சோடிக் காணப்பட்ட  சாலைகள் நேற்று பரபரப்பாக இயங்கின.  அனைத்து வகுப்புகளும் நேற்று தொடங்கப்பட்டன. திறக்கப்பட்ட பள்ளிகளை யொட்டியுள்ள சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.    பாடப்புத்தகங்கள் பள்ளிகள் மூலமாக மாணவர்களுக்கு நேற்றே வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாணவர்கள், தலைமை ஆசிரியரை சந்தித்து புத்தகங்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நேற்று பெரும்பாலான பள்ளிகளில் புத்தகங்கள் வழங்கப்பட்டன. புதிதாக வழங்கப்பட்ட இலவச புத்தகங்களை மகிழ்ச்சியுடன் பெற்று கொண்ட மாணவ மாணவிகள்  வீடு திரும்பினர். 

இந்த கல்வியாண்டில் இருந்து 1 முதல் 8ம் வகுப்பு வரை. முப்பருவ பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்படுவதால் இந்த கல்வியாண்டில் இருந்து மாணவர்கள் புத்தக மூட்டையை சுமக்கத் தேவையில்லை என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில், கல்வித்துறை அதிகாரிகள் நேற்று பள்ளிகளுக்கு நேரடியாகச் சென்று திடீர் ஆய்வு நடத்தினர். இதனிடையே, சில தனியார் மெட்ரிக் பள்ளிகள் வரும் 4ம் தேதியும், சிபிஎஸ்சி பள்ளிகள் வரும் 13ம் தேதியும் திறக்கப்படுகின்றன.

மாணவர் சேர்க்கை  குறித்து பள்ளி கல்வித் துறை சார்பில் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாணவர் சேர்க்கையில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். ஆசிரியர் வருகை குறித்து எஸ்எம்எஸ் மூலம் தகவல் தெரிவிக்க வேண்டும். தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க கடுமையாக உழைத்து, மாணவர்களின் தனித் திறனை கண்டறிந்து அதை மேம்படுத்த வேண்டும். படிப்பில் பின்தங்கிய மாணவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிறப்பு வகுப்புகளை நடத்த வேண்டும்.

தலைமை ஆசிரியர்கள் வாரத்தில் 10 பாட வேளையாவது மாணவர்களுக்கு கற்பிக்க வேண்டும். தினமும் 2 முறை வகுப்புகளுக்கு சென்று ஆசிரியர்கள் பாடம் கற்பிக்கும் முறைகளை கண்காணிக்க வேண்டும்.

பள்ளிகளில் தினமும் கூட்டு பிரார்த்தனை கட்டாயம் நடத்தி, முக்கிய செய்திகளை மாணவர்களுக்கு தெரிவிப்பது, தனித்திறன் படைத்த மாணவர்களை மேடையில் நிறுத்தி பாராட்டு தெரிவிப்பது போன்றவற்றை செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு நாளும் பிறந்த நாள் காணும் மாணவ, மாணவிகள் பட்டியலை தயாரித்து, பிரார்த்தனை கூட்டத்தில் அவர்களுக்கு கூட்டாக வாழ்த்து கூறுவது அவசியமாகும் என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்