முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முதல்வர் ஜெயலலிதா சுதந்திர தின வாழ்த்து

புதன்கிழமை, 15 ஆகஸ்ட் 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஆக.- 15 - எல்லோரும் எல்லாமும் பெற்று அச்சமின்றி வாழ்வதே உண்மையான சுதந்திரம் என்று முதல்வர் ஜெயலலிதா தனது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார். மேலும் தமிழக மக்கள் வாழ்வு வளம் பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்ட தமிழக அரசை அனைவரும் ஆதரிக்க வேண்டும் என்றும், அவர் பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று நடைபெறவுள்ள சுதந்திரத் திருநாளையொட்டி தமிழக மக்களுக்கு விடுத்துள்ள சுதந்திர தினச் செய்தியில் முதல்வர் ஜெயலலிதா கூறியுள்ளதாவது:- இந்தியத் திருநாட்டின் சுதந்திரத்திற்காக தங்கள் இன்னுயிரை துச்சமென மதித்து, உயிர் தியாகம் செய்து, உலக நாடுகள் அனைத்தும் வியக்கத்தக்க வகையில் வேற்றுமையில் ஒற்றுமையைக் கண்டு, அடிமை விலங்கினை தகர்ந்தெறிந்த இந்த இனிய நாளில் அனைவருக்கும் எனது சுதந்திர தினத் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் நம் தாய் திருநாடு அடிமைப்பட்டு, சொல்லொணா துன்பத்திற்கு ஆளானதை நாம் ஒவ்வொருவரும் நன்கு அறிவோம்.  எனவே, சுதந்திரப் போராட்ட வீரர்கள் சுதந்திர வேள்வித் தீயில் சொரிந்த செந்nullராலும், கண்ணீராலும் பெற்ற சுதந்திரத்தைப் பேணிக் காப்பது நம் அனைவரின் கடமையாகும். உங்கள் அன்பு சகோதரியின் தலைமையிலான அரசு, இந்திய திருநாட்டின் சுதந்திரத்திற்காகப் போராடிய தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காக பாடுபட்ட தலைவர்களையும் போற்றி பெருமைப்படுத்தி வருகிறது. அவர்களின் தியாகங்களை எதிர்கால தலைமுறையினர் அறிந்து பின்பற்றும் வகையில் நினைவுச் சின்னங்களை எழுப்பி, மரியாதை செய்து வருகிறது. அனைத்து மக்களும் சாதி, மத, இன வேறுபாடுகளைக் களைந்து, எல்லோரும் எல்லாமும் பெற்று, அச்சமின்றி வாழ்வது தான் உண்மையான சுதந்திரம் ஆகும். தமிழக மக்களின் வாழ்வு வளம் பெறுவதைக் குறிக்கோளாகக் கொண்டு செயலாற்றிடும் இவ்வரசுக்கு தமிழக மக்கள் அனைவரும் நல் ஆதரவு வழங்க வேண்டும் என்பதை தெரிவித்து, அனைவருக்கும் சுதந்திரத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒரு முறை தெரிவிப்பதில் மிக்க மகிழ்ச்சி கொள்கிறேன். இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா தனது வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்