முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேட்டூரில் திறந்துவிடப்பட்ட தண்ணீர் திருச்சி வந்தது

வியாழக்கிழமை, 20 செப்டம்பர் 2012      தமிழகம்
Image Unavailable

 

திருச்சி. செப்.21 - சம்பா சாகுபடிக்காக திறந்து விடப்பட்ட மேட்டூர் அணை நீர் திருச்சி வந்தது. இன்று டெல்டா பகுதி விவசாயிகளுக்காக கல்லணை திறக்கப்படுகிறது.காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடிக்காக வழக்கமாக ஜூன் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு அணையில் போதிய அளவு தண்ணீர் இல்லாததால் குறுவை சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று சம்பா சாகுபடி பணிகளுக்காக முதல்வர் ஜெயலலிதா உத்தரவின்படி கடந்த 17ந்தேதி மேட்டூர் அணை திறக்கப்பட்டது. ஆரம்பத்தில் வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியும், தொடர்ந்து 8 ஆயிரம் கனஅடி பின்னர் தற்போது 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

இந்நிலையில் முதலில் திறக்கப்பட்ட 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேற்று முன்தினம் இரவு 7 மணியளவில் முசிறி காவிரி பாலம் பகுதிக்கு வந்தடைந்தது. தொடர்ந்து நள்ளிரவு 2 மணியளவில் முக்கொம்பு மேலணைக்கும் வந்து சேர்ந்தது. இதைதொடர்ந்து நேற்று மாலை திருச்சி திருவரங்கம் காவிரி பாலத்தை தண்ணீர் வந்தடையும் என்றும், அடுத்த 6 மணி நேரத்தில் கடைசியாக திறக்கப்பட்ட 15 ஆயிரம் கனஅடி தண்ணீரும் திருச்சி வந்து சேரும். இதன் மூலம் நேற்று இரவுக்குள் மேட்டூரில் திறக்கப்பட்ட முழு அளவு தண்ணீரும் திருச்சி மாவட்டத்திற்கு வந்து சேரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பொதுப்பணித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

இதையடுத்து மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்பட்ட 15 ஆயிரம் கனஅடி தண்ணீர் நேற்று நள்ளிரவுக்குள் கல்லணைக்கு வந்து சேர்ந்தது. இந்நிலையில் இன்று காலை 9 மணிக்கு பாசனத்திற்காக கல்லணை திறக்கப்படுகிறது. இதற்கிடையே சம்பா சாகுபடி தடையின்றி நடக்க ஏதுவாக விதை, உரம், பயிர்க்கடன் ஆகியவற்றை தாமதமின்றி வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்