முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இளவரசன் சாவு குறித்து உரிய விசாரணை: தா.பாண்டியன்

சனிக்கிழமை, 6 ஜூலை 2013      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.7 - தர்மபுரியில் தற்கொலை செய்து கொண்ட இளவரசன் சாவு குறித்து விசாரணை தேவை என்று  தா.பாண்டியன், ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் பேட்டி அளித்தனர். இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் தா.பாண்டியன், மார்க்சிஸ்டு மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் ஆகியோர் நேற்று கூட்டாக சென்னையில் நிருபர்களுக்கு பேட்டியளித்தனர். அவர்கள் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் நடந்து வரும் சில சம்பவங்கள் ஆழ்ந்த கவலையை ஏற்படுத்தி உள்ளது. தர்மபுரியில் ஜாதி மறுப்பு காதல் திருமணம் செய்து கொண்ட திவ்யா- இளவரசன் ஆகியோரின் திருமணம் ஜாதி வெறியர்களால் சின்னா பின்னமாக்கப்பட்டது.

திவ்யாவின் தந்தை தற்கொலைக்கு பிறகு இப்போது இளவரசனின் மரணமும் நேர்ந்துள்ளது. சமூகநீதி பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் வெட்கி தலைகுனிய வைக்கிறது.

இளவரசனின் மரணம் தற்கொலையா? கொலையா? என்பதை விசாரிக்க வேண்டும். இந்த காதல் திருமணத்தின் பின்னணியில் நடைபெற்ற சில சம்பவங்களால் சந்தேகம் ஏற்படுகிறது. உரிய விசாரணை நடத்தி இந்த சந்தேகத்தை நீக்க வேண்டும். இதை வலியுறுத்தி முதல்கட்டமாக வருகிற 11-ந்தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

தற்போது ஆட்சி நடத்தி வரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஏற்கனவே ஆண்ட தேசிய ஜனநாயக கூட்டணி பன்னாட்டு கம்பெனிகளுக்கும் கார்பரேட் நிறுவனங்களுக்கும் ஆதரவாக தவறான கொள்கைகளை கடைப்பிடித்து வருகிறது.

நாட்டின் இன்றைய தேவை மாற்று அரசியல் பொருளாதார கொள்கைகள்தான். மாற்றுப் பொருளாதார கொள்கை, மதசார் பின்மை, சமூக நீதி, கூட்டாட்சி தத்துவம் உள்ளிட்ட முக்கிய அம்சங்களுடன் கடந்த 1-ந்தேதி டெல்லி பிரகடனம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் இடம் பெற்றுள்ள 10 அம்ச கோரிக்கைகளை தமிழக மக்களிடம் கொண்டு செல்ல பிரசாரம் மேற்கொள்ள இருக்கிறோம்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பங்குகளை தனியாருக்கு விற்பதை எதிர்த்து தொழிலாளர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளர். உடனடியாக மத்திய அரசு பங்குகளை தனியாருக்கு விற்கும் முடிவை கைவிட வேண்டும். போராடி வரும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக இரு கட்சிகளும் இணைந்து போராட்டம் நடத்தும்.

இயற்கை எரிவாயுவின் விலை 100 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது. தனியார் நிறுவனம் கொள்ளை லாபம் சம்பாதிப்பதற்கு வசதியாக இந்த முடிவை எடுத்துள்ளதால் இதையும் கைவிட வேண்டும். உணவு பாதுகாப்பு அவசர சட்டம் நாடாளுமன்ற கூட்டத்திற்கு முன்பாக அவசர அவசரமாக நிறைவேற்றப்பட்டது கண்டிக்கதக்கது. இதுபற்றி பாராளுமன்றத்தில் குரல் எழுப்பப்படும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்