முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மாவட்டம்தோறும் முதியோர்​- குழந்தைகள் இல்லம்-ஜெயலலிதா

திங்கட்கிழமை, 2 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜன.- 2 - தமிழகத்தில் மாவட்டம் தோறும் முதியோர்கள் மற்றும் குழந்தைகள் இல்லம் அமைப்பதாக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளதற்கு சமூக சமத்துவ டாக்டர்கள் சங்கம் வரவேற்பு தெரிவித்துள்ளது. இது குறித்து சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்க பொதுச் செயலாளர் டாக்டர் ஜி.ஆர்.ரவீந்திரநாத் விடுத்துள்ள பத்திரிகை செய்தி வருமாறு: தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களில் முதியோர் மற்றும் குழந்தைகள் இல்லங்களை உள்ளடக்கிய 64 ஒருங்கிணைந்த வளாகங்கள் அமைக்கப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளது வரவேற்கத்தக்கது.  சமூக மாற்றத்தால் கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து வரும் காலக்கட்டத்தில் முதியோர்களும், ஆதரவற்ற குழந்தைகளும் பல்வேறு சமூக,பொருளாதார பிரச்சனைகளுக்கு உள்ளாகிவருகின்றனர். உடல் மற்றும் உள ரீதியான பாதிப்புகளுக்கும் ஆளாகின்றனர். குறிப்பாக 60 வயதுக்கும் மேற்பட்ட மூதாட்டிகள் கடுமையான இன்னல்களுக்கு ஆட்பட்டு வருகின்றனர். அவர்களது பிரச்சனை தனிப்பட்ட அவர்களின் சொந்தப்பிரச்சனைகளல்ல, அவை சமூகப்பிரச்சனையாகும்.  எனவே, அவர்களது பிரச்சனைகளுக்கு தீர்வு காணும் பொறுப்பு அரசுகளுக்கு உள்ளது. அந்த அடிப்படையில் தமிழக முதல்வர் அறிவித்துள்ள இந்த திட்டம் வரவேற்கத்தக்கது. இதனால், ஆதரவற்ற முதியோரும், குழந்தைகளும் பயனடைவர். இந்த ஒருங்கிணைந்த வளாகங்களில் மாற்றத்திறனாளிகளுக்கான இல்லங்களும் அமைக்கப்படும் என்பது மிகவும் பாராட்டத்தக்கது.  வெறும் காப்பகங்கள் போல் அன்றி, மருத்தவம், கல்வி, நூல்நிலைய வசதி போன்றவையும் இடம் பெறும் என்பதும் வரவேற்புக்குரியது.  

குழந்தைகள் மற்றும் முதியோர் இல்லங்களை ஒரே வளாகத்தில் அமைப்பது குழந்தைகளும் முதியோரும் பரஸ்பரம் அன்பையும், பாசத்தையும், ஆதரவையும் பகிர்ந்து கொள்ள துணைபுரியும், மன நிறைவையும் அளிக்கும். எனவே, சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் இத்திட்டத்தை வரவேற்கிறது. 

இத்திட்டத்திற்கான நிதி ஒதுக்கீடு போதுமானதல்ல. எனவே கூடுதல் நிதியை ஒதுக்கிட வேண்டும். இத்திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பை அரசுசாரா தொண்டு நிறுவனங்களிடம் ஒப்படைப்பது சரியல்ல. இது பல்வேறு முறைகேடுகளுக்கும், பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கும். எனவே, இத்திட்டத்தை செம்மையாக்கிட, சமூக நலத்துறை மூலமாக நேரடியாக இத்திட்டத்தை அரசே நடைமுறைப்படுத்த வேண்டும்.

குழந்தைகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளுக்கு இல்லங்களை உருவாக்குவது போல் மனநல காப்பகங்களையும் அரசு உருவாக்க முன்வரவேண்டும் என சமூக சமத்துவத்திற்கான டாக்டர்கள் சங்கம் கேட்டுக்கொள்கிறது. 

இவ்வாறு அந்த பத்திரிக்கை செய்தியில் ரவீந்திரநாத் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்