முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உத்திரப்பிரதேசத்தில் இன்று 3-வது கட்ட தேர்தல்:

புதன்கிழமை, 15 பெப்ரவரி 2012      இந்தியா
Image Unavailable

லக்னோ,பிப்.- 15   உத்திரப்பிரதேச மாநிலத்தில் இன்று 3-வது கட்டமாக 56 தொதிகளுக்கு தேர்தல் நடக்கிறது. இதனையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  உத்திரப்பிரதேசத்தில் 403 தொகுதிகளை கொண்ட சட்டசபைக்கு 7 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 56 தொகுதிகளுக்கு கடந்த 8-ம் தேதி முதல் கட்டமாக தேர்தல் நடைபெற்றது. முதல்கட்ட தேர்தல் மிகவும் அமைதியாக நடைபெற்றது. அதனையடுத்து கடந்த 11-ம் தேதி 2-வது கட்டமாக 59 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் நடைபெற்றன. இருந்தபோதிலும் முதல் 2 கட்ட தேர்தலில் விறுவிறுப்பான ஓட்டுப்பதிவு நடைபெற்றது. இந்தநிலையில் இன்று 56 தொகுதிகளுக்கு 3-வது கட்ட தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி இந்த 56 தொகுதிகளிலும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. 10 மாவட்டங்களில் தேர்தல் நடக்கும் 56 தொகுதிளில் ஒரு கோடியே 77 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் ஆயிரத்து 18 வேட்பாளர்களின் தேர்தல் முடிவை நிர்ணயிக்கிறார்கள். இந்த 10 மாவட்டங்களும் வகுப்புவாத உணர்வு உள்ள மாவட்டங்களாகும். அதனால் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு படையினருக்கும் போலீசாருக்கும் அமைதியை காப்பதில் ஒரு சவாலாக இருக்கும் என்று கருதப்படுகிறது. வாரணாசி, ஜன்பூர், அலகாபாத் ஆகிய மாவட்டங்களில் வகுப்புவாதம் அதிகம் உள்ள பகுதிகளாகும். மீர்ஜாபூர், சண்டாலி, சோனேபத்ரா ஆகிய மாவட்டங்களில் நக்சலைட்கள் அதிகம் உள்ளனர். இந்த 10 மாவட்டங்களிலும் போலீசார், ஊர்க்காவல் படையினர் சுமார் ஒரு லட்சம் பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மேலும் சுமார் 80 ஆயிரம் மத்திய படையினரும் அந்த பகுதிகளுக்கு பாதுகாப்புக்காக அனுப்பப்பட்டுள்ளனர். ஹெலிகாப்டர் மூலம் பறந்து சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக 3 ஹெலிகாப்டர்கள் ரோந்துக்காக தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தலின்போது சுமார் 225 உயரதிகாரிகள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். ஒவ்வொரு காவல்நிலையத்திலும் அதிரடிபடையினர் நிறுத்தப்பட்டுள்ளனர். அருகில் உள்ள சட்டீஷ்கர், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து நக்சலைட்கள் ஊடுருவலை தடுக்க எல்லைகள் மூடப்பட்டுவிட்டன. டெல்லியில் நடந்துள்ள கார் குண்டுவெடிப்பையொட்டி அருகில் உள்ள உத்திரப்பிரதேசம் மாநிலம் முழுவதும் போலீசார் உஷார்படுத்தியுள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்