முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      தமிழகம்
Kutralam--2023-07-06

தென்காசி, குற்றால அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு நேற்று முதல் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த தொடர் மழையின் காரணமாக குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் கணிசமாக விழுந்தது. இந்நிலையில் கடந்த 17-ம் தேதி பழைய குற்றாலம் அருவியில் ஏராளமான சுற்றுலா பயணிகள் குளித்து கொண்டிருந்த போது ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கால் நெல்லையை சேர்ந்த அஸ்வின் என்ற சிறுவன் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு இறந்தான்.

இதையடுத்து குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு மாவட்ட நிர்வாகம் தடை விதித்தது. தொடர்ந்து சில நாட்களாக அருவிகளில் மிதமான அளவிலேயே தண்ணீர் கொட்டினாலும், சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அருவிகளில் இது போன்று திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்படுவதை முன்கூட்டியே அறிந்து சுற்றுலா பயணிகளை பாதுகாப்பாக வெளியேற்ற தேவையான ஏற்பாடுகள் செய்வது தொடர்பாக நேற்று முன்தினம் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர், போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் ஆகியோர் அருவிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து அருவிகளில் குளிப்பதற்கான தடை உத்தரவு நேற்று முன்தினம் விலக்கிக் கொள்ளப்பட்டது. இதனால் நேற்று காலை முதல் மெயின் அருவி தவிர மற்ற அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

வெள்ளப்பெருக்கு ஏற்பட்ட பழைய குற்றாலம் அருவியில் ஒரு வாரத்துக்கு பின்னர் நேற்று காலை முதல் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து பழைய குற்றால அருவியில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியலில் ஈடுபட்டு வருகின்றனர். அங்கு பாதுகாப்பு அம்சமாக கம்பிகள் கொண்டு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. 

சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய பழைய குற்றாலம் அருவியில் இனி காலை 6 மணி முதல் மாலை 5.30 மணி வரை மட்டுமே குளிக்க அனுமதி வழங்கப்படும் எனவும், இரவில் குளிக்க அனுமதி இல்லை எனவும் மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் உத்தரவிட்டுள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து