முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோர்ந்து விடாமல் களப்பணி ஆற்றுங்கள்: ஆதரவாளர்கள் மத்தியில் ஒ.பி.எஸ் பேச்சு

சனிக்கிழமை, 1 ஏப்ரல் 2017
Image Unavailable

சென்னை, சோர்ந்து விடாமல் களப்பணி ஆற்றுங்கள் என்று ஆர்.கே. நகரில் நடந்த கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் ஒ.பன்னீர்செல்வம் பேசினார்.

ஆதரவு

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அ தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார். இந்த அணியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தலைமையில் தண்டையார்பேட்டை பகுதியில் நடந்தது. இக்கூட்டத்தில் அகில இந்திய மூவேந்தர் முன்னணி கழகம் டாக்டர் சேதுராமன், தமிழ் மாநில கட்சி வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ், தமிழ்நாடு தேவர் பேரவை ஏ.சி.சீனிச்சாமித் தேவர், அம்பேத்கார் இந்திய குடியரசு கட்சியின் ஆர்.சத்தியசீலன், இந்திய தேசிய முஸ்லீம் லீக் ஒய்.ஜவஹர் அலி, அம்மா திராவிட முன்னேற்றக்கழகம் இனியன் சம்பத், தமிழ்நாடு முத்தரையர் சங்கம் ராஜமாணிக்கம், சமூக மக்கள் கட்சியின் விஜயகுமார் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட அமைப்பினர் ஒ.பன்னீர்செல்வத்துக்கு பொன்னாடை அணிவித்து தங்களது ஆதரவைத் தெரிவித்தனர்.

பயப்படாதீர்கள்

அதன்பிறகு தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ள பெண் களப்பணியாளர்களிடம் ஒ.பன்னீர்செல்வம் பேசியதாவது:-
நம்முடைய வேட்பாளர் மதுசூதனனுக்கு வாக்காளர்கள் மத்தியில் பெருகி வரும் ஆதரவைப் பார்த்து மற்றவர்கள் அதிர்ந்துள்ளனர். இந்தத் தேர்தலில் நாம் வரலாற்றுச் சாதனை படைக்க வேண்டும். நமக்கும், தி.மு.க.வுக்கும் தான் போட்டி என ஸ்டாலினே பேசி வருகிறார். மற்றவர்கள் இந்த தேர்தலில் எப்படியும் வெற்றி பெற்றே ஆகவேண்டும் என்ற எண்ணத்தில் ஏதேதோ வேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். யாருக்காகவும், எதற்காகவும் பயப்படாதீர்கள். உங்களுக்கு துணையாக நான் இருக்கிறேன். மக்கள் ஆதரவு நமக்குத்தான் உள்ளது. அதற்காக சோர்ந்து விடாமல் களப்பணியை இன்னும் தீவிர மாக்குங்கள். வெற்றி நமக்குத் தான்.

இவ்வாறு ஒ.பன்னீர்செல்வம் பேசினார்.

பலர் பங்கேற்பு

இக்கூட்டத்தில் வேட்பாளர் மதுசூதனன், முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன் , மா பா பாண்டியராஜன் எம்.எல்.ஏ. மற்றும் மனோஜ் பாண்டியன், செம்மலை எம்.எல்.ஏ., ஜே.சி.டி.பிரபாகரன், நடிகர் ராமராஜன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடும் அண்ணா தி.மு.க. (புரட்சித்தலைவி அம்மா) கட்சி வேட்பாளர் மதுசூதனனை ஆதரித்து, முன்னாள் முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளார். அதன்படி, தண்டையார்பேட்டை பகுதிக்குட்பட்ட சேனியம்மன் கோவில் தெரு, ரத்தின சபாபதி தெரு, பெருமாள் கோவில் தெரு, திருநாவுக்கரசர் தோட்டம், திலகர் நகர் உள்பட பல இடங்களில் திறந்த ஜீப்பில் சென்று ஒ.பன்னீர்செல்வம் ‘இரட்டை மின் விளக்கு’ சின்னத்துக்கு வாக்குகள் சேகரித்தார். அப்போது அவருடன், டாக்டர் மைத்ரேயன் எம்.பி., முன்னாள் அமைச்சர் பொன்னையன், முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், வடசென்னை ஜெயலலிதா பேரவை செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், ஆர்.வி.ரஞ்சித்குமார் உள்பட பல நிர்வாகிகளும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்