முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருவாரூரில் பொது சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாம் : கலெக்டர் நிர்மல் ராஜ் தொடங்கிவைத்தார்

ஞாயிற்றுக்கிழமை, 2 ஏப்ரல் 2017      திருவாரூர்

 

திருவாரூர் பேரூந்து நிலையத்தில் பொது சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை சார்பில் போலியோ சொட்டு மருந்து முகாமினை மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தொடங்கிவைத்தார்.

 

 

 

போலியோ முகாம்

 

 

 

தொடர்ந்து திருவாரூர் ரெயில் நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள போலியோ சொட்டு மருந்து முகாமினை பார்வையிட்டு குழந்தைகளுக்கு சொட்டு மருந்தினை வழங்கினார்.

 

பின்னர் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது,

 

திருவாரூர் மாவட்டத்தில் போலியோ நோயினை ஒழிக்கும் விதமாக தீவர போலியோ சொட்டு மருந்து இன்று 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் முதல் தவணையாக வழங்கப்படுகிறது. இதனால் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள 5 வயதிற்குட்பட்ட சுமார் 1 லட்சத்து 15 ஆயிரம் குழந்தைகள் பயனடைவார்கள். சொட்டு மருந்து வழங்க ஊரக பகுதிகளில் 800 முகாம்களும் , நகர்பகுதிகளில் 70 முகாம்களுமாக மொத்தம் 870 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஆண்டு 21.02.2016 அன்று நடைபெற்ற முகாமில் 1 லட்சத்து 14 ஆயிரத்து 773 குழந்தைகள் பயனடைந்தனர். இம்முகாம்கள் அரசு மருத்துவமனைகள் , ஆரம்ப சுகாதார நிலையங்கள் , துணை சுகாதார நிலையங்கள் , சத்துணவு மையங்கள் , பள்ளிகள், புகைவண்டி நிலையங்கள் , பேருந்து நிலையங்கள் , கோவில்கள் , வழிபாட்டு தலங்கள் ஆகிய இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் நடமாடும் குழுக்கள் மூலம் போக்குவரத்து வசதி இல்லாத இடங்களிலும் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

 

முகாம் அன்று பிறந்த குழந்தைகளுக்கும், ஏற்கனவே எத்தனை முறை போலியோ சொட்டு மருந்து கொடுத்திருந்தாலும் தற்போது சொட்டு மருந்து தவறாமல் கொடுக்கப்பட வேண்டும். பணி நிமித்தம் காரணமாக இடம் பெயர்ந்து செல்லும் செங்கல் சூளை தொழிலாளர்கள், கட்டுமானத்தொழிலாளர்கள், சாலைப்பணி தொழிலாளர்கள், கைரேகை பார்ப்பவர்கள், ஆடு, மாடு மற்றும் வாத்து மேய்ப்பவர்கள் , பிற மாநில தொழிலாளர்களுக்கு (பொம்மை செய்பவர்கள், இரும்பு வேலை செய்பவர்கள் போன்றவர்கள்) சிறப்பு கவனம் செலுத்தி அவரவர்கள் பணியிடத்தில் சொட்டு மருந்து வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

இபபணியில் சுகாதாரம் , ஊட்டச்சத்து , ஊரக வளர்ச்சி, கல்வித்துறை, வருவாய்த்துறை , மாணவர்கள், தன்னார்வலர்கள், ரோட்டரி சங்கத்தினர் ஆகியோர் சொட்டு மருந்து வழங்குபவர்களாகவும் மேற்பார்வையாளர்களாகவும், கண்காணிப்பாளர்களாகவும் பணியாற்ற உள்ளனர். இப்பணியில் மொத்தம் சுமார் 3 ஆயிரத்து 480 பணியாளர்கள் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.

 

மேலும் இப்பணியனை மேற்பார்வையிட ஆரம்ப சுகாதார நிலைய அளவில் 112 மேற்பார்வையாளர்களும், வட்டார அளவில் 10 கண்காணிப்பாளர்களும், மாவட்ட அளவில் 8 மேற்பார்வையாளர்கள் என மொத்தம் 130 அலுவலர்கள் பணியாற்றுகின்றனர் . பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்தி 5 வயதிற்குட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் போலியோ சொட்டு மருந்து வழங்கி போலியோ இல்லாத நிலையை உருவாக்க வேண்டும் என மாவட்ட கலெக்டர் இல.நிர்மல் ராஜ் தெரிவித்தார்.

 

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் க.சக்திமணி,இணை இயக்குநர் (பொது சுகாதார மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை) மரு.அசோகன், வருவாய் கோட்டாட்சியர் முத்துமீனாட்சி, துணை இயக்குநர் மரு.செந்தில் குமார், மற்றும் அரசு அலுவலர்கள் , மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்