முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

516 வாக்குகள் பெற்று துணை-ஜனாதிபதி தேர்தலில் வென்றார் வெங்கையா நாயுடு - பிரதமர் மோடி - தலைவர்கள் வாழ்த்து

சனிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2017      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி : துணை ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ.க வேட்பாளர் வெங்கையா நாயுடு 516 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட கோபால கிருஷ்ண காந்தி 244 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார்.

தேர்தல்...

துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரி பதவிக் காலம் வரும் 10-ம் தேதி முடிவடைகிறது. இதனைத் தொடர்ந்து ஆளும் பாஜக சார்பில் வெங்கையா நாயுடுவும், எதிர்க்கட்சிகள் சார்பில் மேற்குவங்க முன்னாள் ஆளுநர் கோபால்கிருஷ்ண காந்தியும் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர்.

இதையடுத்து புதிய துணை ஜனாதிபதியை தேர்வு செய்ய தேர்தல் தேதியை தலைமை தேர்தல் கமி‌ஷன் அறிவித்தது. அதன்படி, புதிய துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க நேற்று தேர்தல் நடைபெற்றது. இதற்காக பாராளுமன்றத்தில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. அங்கு அமைக்கப்பட்டுள்ள சிறப்பு வாக்குச்சாவடியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் மக்களவை, மாநிலங்களவை எம்.பி.க்கள் 790 பேர் வாக்களித்தனர்.

ரகசிய வாக்கெடுப்பு முறையில் இந்த தேர்தல் நடைபெற்றது. இதில் கட்சிகள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பிக்க முடியாது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் சேர்த்து மொத்தம் 790 வாக்குகள் உள்ளன. அவற்றில் மக்களவையில் இரு இடங்களும், மாநிலங்களவையில் ஓரிடமும் காலியாக உள்ளன.

98.21 சதவீத வாக்குப்பதிவு

நேற்று காலை முதல் வாக்கு பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி வாக்களித்துள்ளார். மேலும், நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து வாக்களித்தனர். காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தனது வாக்கை பதிவு செய்தார். இந்த தேர்தலில் 98.21 சதவீத வாக்குகள் பதிவாகின. அதாவது மொத்தம் உள்ள 790 வாக்குகளில் 771 வாக்குகள் பதிவாகியது. இதையடுத்து வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. பின் வாக்குகள் எண்ணும் பணி நிறைவடைந்து தேர்தல் முடிவுகள் வெளியாயின. 11 வாக்குகள் செல்லாதவை என அறிவிக்கப்பட்டுள்ளது. பாஜக, காங்கிரஸ்ஸ ஐயூஎம்எல் கட்சிகளின் தலா 2 எம்பிக்கள் வாக்களிக்கவில்லை.

வெங்கையா நாயுடு வெற்றி

அதன்படி எதிர்க்கட்சி வேட்பாளர் கோபால கிருஷ்ண காந்தியை விட 272 அதிக வாக்குகள் பெற்று தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றார். அவர் 516 வாக்குகளையும், ஐக்கிய முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கோபாலகிருஷ்ண காந்தி 244 வாக்குகளையும் பெற்றனர். இதையடுத்து வெங்கையா நாயுடு விரைவில் துணை ஜனாதிபதியாக பதவியேற்கவுள்ளார்.

பிரதமர் மோடி வாழ்த்து

வெங்கையா நாயுடு வெற்றி பெற்றதை தொடர்ந்து பாஜகவினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர். வெங்கையா நாயுடுவுக்கு பாஜக மற்றும் ஆதரவு கட்சி நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். வெங்கையாவுக்கு, பிரதமர் மோடி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கோபால கிருஷ்ண காந்தி, ஒ.பி.எஸ் உள்ளிட்ட தலைவர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

ஆந்திர மாநிலம், நெல்லூர் மாவட்டத்தைச் சேர்ந்த வெங்கையா, கடந்த 1949-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி பிறந்தார். ஆந்திரா பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்றார். ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். ஜெய் ஆந்திரா இயக்கம் என்றதன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார்.

இளைஞரணி தலைவராக...

பாஜகவின் இளைஞரணி தலைவராக கடந்த 1977-இல் இருந்தார். இவர் முதல் முறையாக 1978-ல் சட்டசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1985-88 வரை ஆந்திர மாநில பாஜக பொதுச் செயலாளராகவும், 1988-1993 வரை ஆந்திர மாநில பாஜக தலைவராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 1988-ம் ஆண்டிலிருந்து 3 முறை கர்நாடகா மாநில எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1993-2000 பா.ஜ.க பொதுச்செயலாளராக இருந்தார். அதன்பின்னர் மத்தியில் பா.ஜ.க ஆட்சியின்போது வாஜ்பாய் அமைச்சரவையில் 2000-2002-ம் ஆண்டு வரை மத்திய கிராமப்புற வளர்ச்சித் துறை அமைச்சராக இருந்தார்.

வீட்டு வசதி துறை...

கடந்த 2005-ஆம் ஆண்டு முதல் பாஜகவின் தேசிய துணைத் தலைவராக உள்ளார். கடந்த 2014-2017 வரை மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சராகவும், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சராகவும், நகர்ப்புற வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு துறை அமைச்சராகவும் பணியாற்றியுள்ளார். பின்னர் 2016-17-ஆம் ஆண்டு வரை தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சராகவும் இருந்தார்.

15-வது துணை ஜனாதிபதி

15-வது துணை ஜனாதிபதி தேர்தலில் வெங்கையா நாயுடு வெற்றி பெற்றதால் சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் துணை குடியரசுத் தலைவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கோபால கிருஷ்ண காந்தி கடந்த 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் 22-ஆம் தேதி பிறந்தார். தற்போது துணை ஜனாதிபதியாக உள்ள ஹமீது அன்சாரி 1937-ஆம் ஆண்டு பிறந்தவர். இந்தியாவில் துணை ஜனாதிபதிகளாக பதவி வகித்த 12 பேரும் சுதந்திரத்துக்கு முன்பு பிறந்தவர்களே. இந்தியாவின் முதல் துணை ஜனாதிபதியான சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் கடந்த 1888-ஆம் ஆண்டு பிறந்தவர். சுதந்திர இந்தியாவில் பிறந்த முதல் பிரதமர் என்ற பெருமை நரேந்திர மோடிக்கு உள்ளது. அதேபோல வெங்கையா நாயுடுவும் இந்தப் பெருமையைப் பெற்றுள்ளார்.


516 எம்.பி.க்கள் வாக்களிப்பு

துணைஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள வெங்கையா நாயுடுவுக்கு ஆதரவாக 516 எம்.பி.க்கள் வாக்களித்துள்ளனர்.

பாராளுமன்ற லோக்சபை மற்றும் ராஜ்யசபையில் மொத்தம் 785 எம்.பி.க்கள் உள்ளனர். இதில் இரண்டு சபைகளையும் சேர்ந்த எம்.பி.க்கள் 516 பேர் வெங்கையா நாயுடுக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர். எதிர்க்கட்சிகள் சார்பாக போட்டியிட்ட கோபால கிருஷ்ண காந்திக்கு 244 எம்.பி.க்கள் மட்டுமே வாக்களித்துள்ளனர். 771 எம்.பி.க்கள் வாக்களித்ததில் 11 பேர்களின் வாக்குகள் செல்லாதவைகளாக அறிவிக்கப்பட்டுள்ளது. 785 எம்.பி.க்கள் இருந்தபோதிலும் 14 எம்.பி.க்கள் வாக்களிக்கவில்லை. ஒரு எம்.பி.யின் ஒட்டு மதிப்பு 790 ஆகும். லோக்சபையில் 2 உறுப்பினர்கள் பதவி காலியாக உள்ளது. அதேமாதிரி ராஜ்யசபையில் 3 எம்.பி.க்கள் பதவி காலியாக உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து