முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊதுபத்தி கொளுத்தியதற்கு கூட சி.பி.ஐ. விசாரணை கேட்பாரா ? ஸ்டாலினுக்கு அமைச்சர் ஜெயகுமார் காட்டமான பதிலடி

திங்கட்கிழமை, 21 ஜனவரி 2019      தமிழகம்
Image Unavailable

சென்னை : தலைமைச் செயலகத்தில் ஊதுபத்தி கொளுத்தியதற்கு கூட மு.க.ஸ்டாலின் சி.பி.ஐ. விசாரணை கேட்பாரா ? என்று அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பினார்.

ஸ்டாலினுக்கு தான்...

சென்னையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் கனவுகளை பிரதமர் நிறைவேற்றுவது நல்ல விஷயம்தான். அவ்வாறு கூறிய மத்திய பாதுகாப்புத்துறை நிர்மலா சீதாராமனின் கூறியிருப்பது வரவேற்கத்தக்கது. சந்தர்ப்பவாதம் என்று சொன்னால் அது தி.மு.க.வுக்கும், ஸ்டாலினுக்கும்தான் பொருந்தும். இவை அனைத்தும் கடந்த கால வரலாறுகள். மத்திய அரசில் 17 வருடங்களாக இருந்து இரட்டைவேடம் போட்ட காரணத்தினால் தமிழகம் எந்த வளர்ச்சியும் அடையவில்லை.

இரட்டை வேடம்...

இரட்டை வேடம் போட்டவர்களின் சாயம் வெளுத்து விடும். இந்த வகையில்தான் சென்னையில் பிரதமராக ராகுல்காந்தியை ஸ்டாலின் முன்மொழிந்தார். தைரியம் இருந்திருந்தால் மம்தா கூட்டிய கூட்டத்தில் ராகுல்காந்தியை முன்மொழிய வேண்டியதுதானே. ஏன் அங்குப் பம்மினார் ஸ்டாலின். ஜகா வாங்கி விட்டார். இதுதான் அவரின் இரட்டைவேடம். அங்கிருந்து சென்னை வந்து தேர்தல் வந்தவுடன் இது குறித்து பேசலாம் என்கிறார். சந்தர்ப்பவாதிகளை மக்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள். மக்கள் இவர்களை ஒதுக்கி வைக்கும் நிலை எதிர்காலத்தில் ஏற்படும். சந்தர்ப்பவாதம் வெற்றி கொண்டதாக வரலாறு இல்லை.

சிறுபிள்ளைத்தனம்...

ஸ்டாலின் யாகத்தைப் பற்றி பேசி வருகிறார். யாகம் வளர்ப்பதினால் ஒருவர் முதல்வர் ஆக முடியுமா? நீங்கள் ஒரு யாகம் வளர்க்க வேண்டியதுதானே. முதல்வராகி விடலாம். ஸ்டாலினின் செயல் சிறுபிள்ளைத்தனமானது. அலுவலகம் செப்பனிடப்பட்டு ஊதுபத்தி கொளுத்தினால், கற்பூரம் கொளுத்தினால் கூட அதற்குப் பெயர் யாகம் என்பதா ? உடனே இதற்கு ஒரு காரணம் கற்பித்து சிண்டு மூட்டி விடுகிறார்கள்.

வலிமையான இயக்கம்...

எப்படி சிண்டு மூட்டினாலும் அ.தி.மு.க. கீழ் மட்டத்திலிருந்து மேல் மட்டம் வரை ஒற்றுமையாக இருந்து வெற்றி நடை போட்டு வருகிறது. யார் நினைத்தாலும் பிரிக்க முடியாத சக்தி. இமயமலையைக் காட்டிலும் வலிமையான இயக்கம்.  ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு எவ்வளவோ சித்து விளையாட்டு எல்லாம் விளையாடினார்கள். எந்தச் சித்து விளையாட்டும் எடுபடவில்லை. நின்றால் சி.பி.ஜ. வேண்டும். உட்காந்தால் சி.பி.ஜ. வேண்டும் என்று தொடர்ந்து ஸ்டாலின் பேசி வருகிறார். தலைமைச் செயலகத்தில் ஊதுபத்தி கொளுத்தியதற்கு கூட மு.க.ஸ்டாலின் சி.பி.ஐ. விசாரணை கேட்பாரா ? இப்படித்தான் ஸ்டாலின் நிலை பரிதாபமாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து