முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பிரேசிலில் நடந்த போட்டியில் இந்திய இளம் விஞ்ஞானிக்கு ரூ.18 லட்சம் பரிசு

வியாழக்கிழமை, 14 நவம்பர் 2019      உலகம்
Image Unavailable

யோ டி ஜெனிரோ : பிரேசில் நாட்டில் நடந்த போட்டியில் இந்திய இளம் விஞ்ஞானிக்கு ரூ.18 லட்சம் பரிசு கிடைத்து உள்ளது.

பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் இணைந்து பிரிக்ஸ் அமைப்பை உருவாக்கி உள்ளன. இந்த அமைப்பின் இளம் விஞ்ஞானிகள் மன்ற மாநாடு கடந்த 6-ம் தேதி முதல் 8-ம் தேதி வரை பிரேசிலில் நடந்தது. இதில் மேற்படி 5 நாடுகளை சேர்ந்த இளம் விஞ்ஞானிகள் கலந்து கொண்டு தங்கள் கண்டுபிடிப்புகளை காட்சிப்படுத்தினர். இதில் இந்தியா சார்பில் 21 பேர் கொண்ட குழு பங்கேற்றது. அதில் பீகாரை சேர்ந்த ரவி பிரகாஷ் என்பவரும் இடம்பெற்று இருந்தார். பெங்களூருவில் உள்ள தேசிய பால் பண்ணை ஆராய்ச்சி நிறுவனத்தில் முனைவர் பட்டம் பெற்ற இவர், மலிவு விலையிலான பால் குளிரூட்டும் அலகு ஒன்றை கண்டுபிடித்து இருந்தார்.

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இவரது படைப்பின் செயல்பாட்டை அங்கு விளக்கி காட்டப்பட்டது. இந்த போட்டியில் ரவி பிரகாசின் கண்டுபிடிப்பு, தற்போது பிரிக்ஸ் இளம் கண்டுபிடிப்பாளருக்கான முதல் பரிசை பெற்று உள்ளது. இந்த பரிசு 25 ஆயிரம் டாலர் (சுமார் ரூ. 18 லட்சம்) கொண்டதாகும். ரவி பிரகாஷ் உருவாக்கியுள்ள இந்த பால் குளிரூட்டும் அலகானது, வெறும் 30 நிமிடங்களிலேயே பாலை 37 டிகிரி செல்சியசில் இருந்து 7 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலைக்கு மாற்றக்கூடிய திறன் வாய்ந்தது. இதற்காக நானோ-திரவ அடிப்படையிலான கட்டமைப்பு பொருட்கள் இதில் பயன்படுத்தப்படுகிறது. இந்த அலகு மலிவு விலையில் வாங்கக் கூடியது என்பதால், சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த தகவலை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார். பிரிக்ஸ் நாடுகளை சேர்ந்த இளம் கண்டுபிடிப்பாளர்கள், தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் திட்டம் வகுக்க வேண்டும் என கடந்த 2014-ம் ஆண்டு நடந்த பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடி யோசனை தெரிவித்தார். இதை ஏற்று பிரிக்ஸ் இளம் விஞ்ஞானிகள் மன்றம் உருவாக்கப்பட்டு, இளம் கண்டுபிடிப்பாளர் பரிசும் உருவாக்கப்பட்டு உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து