முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மக்கள் நம்பிக்கையை பூரணமாக பெற்று பீடு நடைபோடுகிறோம் : பட்ஜெட் தாக்கல் செய்த துணை முதல்வர் ஓ.பி.எஸ். பெருமிதம்

வெள்ளிக்கிழமை, 14 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அம்மாவின் அரசுக்கு உலகம் முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிகின்றன என்றும்  மக்கள் நம்பிக்கையை பூரணமாக பெற்று அரசு பீடு நடைபோடுகிறது என்றும் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெருமிதத்துடன் சட்டசபையில் கூறினார்.

தமிழக சட்டசபையில் நேற்று 2020–21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்து ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-

பொருள் வரும் வழிகளைப் பெருக்கச் செய்து, அவற்றால் வளத்தை உண்டாக்கி, வரும் இடையூறுகளை ஆராய்ந்து நீக்கி செயலாற்ற வல்லவரே, செயல் திறன் படைத்தவர் என்னும் வள்ளுவர் வாய்மொழிக்கு இலக்கணமாகி, நிதி ஆதாரங்களை வெகுவாக பெருக்கி, அனைத்து துறைகளுக்கும் அதனை ஒதுக்கி தந்து, நாடு வளம் பெறச் செய்து, எதிர்வந்த இன்னல்களையும் இடையூறுகளையும் பொடிப்பொடியாக்கி, துடைத்து தூரத் தள்ளி, மக்கள் நலன் ஒன்றே மனதில் கொண்டு செயலாற்றி தமிழ்க்குடியை மேலும் மேலும் முன்னேற்றவும், தமிழ்நாட்டை இந்தியாவின் முதன்மை மாநிலமாக நிலை நிறுத்திடவும், மறைந்த முன்னாள் முதல்வர் அம்மா, தனது வாழ்க்கையை முழுவதையும் தமிழக மக்களுக்கே ஈந்து, அரும்பாடுபட்டு, பெரும் பெருமையை பெற்றார்.

மக்களால் நான், மக்களுக்காகவே நான் என்னும் லட்சிய முழக்கத்தோடு மக்களுக்குத் தொண்டு செய்வதே தனது வாழ்நாள் கடமை எனக் கொண்டு இரவு பகல் பாராமல், ஓய்வென்பதே இன்றி செயலாற்றி, தமிழக மக்களின் இதயங்களில் என்றும் நீங்கா இடம் பிடித்த, அம்மாவின் உழைப்பிலும், தியாகத்திலும் பூத்த அம்மாவின் அரசை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையேற்று சிறப்பாக தொடர்ந்து வெற்றிகரமாக நடத்தி வருகிறார்.

ஏழையரிடம் அன்பு செலுத்தி, எளியவர்க்கு ஆதரவு காட்டி, தாய்க்குலத்திற்கு  பெருமை தந்து, மகளிர் அதிகாரம் பெற்றிட வழி வகுத்து, தமிழக மக்கள் அனைவரும் நலமே காண தினம் உழைத்து, அவர்தம் நெஞ்சங்களில் நீங்கா இடம் பெற்று, மறைந்தும் மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் அம்மாவை வணங்கி, அம்மா விண்ணின்று எங்களை வாழ்த்தி, வழி நடத்திட வேண்டும் என வேண்டி, 2020- 21ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை இப்பேரவை முன் சமர்ப்பிக்கின்றேன். தாய்த் தமிழ்நாட்டை எவ்வாறெல்லாம் உயர்த்த வேண்டும் என்று அம்மா கனவு கண்டாரோ, அந்த விருப்பங்களையெல்லாம் நிறைவேற்ற, அம்மாவின் அரசு தணியாத சாதனை தாகத்துடன் கடமையாற்றி வருகிறது.

அம்மாவின் விசுவாசத் தொண்டர்களாகிய நாங்கள், அம்மாவின் தொலைநோக்குப் பார்வையினைத் தொடர்ந்து பின்பற்றுவதுடன் ‘அமைதி, வளம், வளர்ச்சி’ என்கிற அவரது கொள்கையினை முன்னெடுத்துச் சென்று, தமிழ்நாட்டு மக்கள் நல் ஆளுமையின் பலன்களை முழுமையாக அடைவதற்கு அயராது பாடுபட்டு வருகிறோம். அம்மா, மூன்றாண்டுகளுக்கு முன்னர் நம்மை விட்டு நீங்கிய போது, நாம் அனைவரும் திக்கற்றவர்களாக உணர்ந்தோம். எனினும், அம்மாவின் உண்மையான தாயுள்ளம், நாங்கள் செல்ல வேண்டிய பாதையை வகுத்துக் காட்டியுள்ளதுடன், மக்கள் பணியாற்றும் விடாமுயற்சியில் தளராத உறுதியையும், மக்கள் சேவையைத் தொடர்வதற்கான ஆற்றலையும் எங்கள் ஒவ்வொருவருக்கும் அளித்துச் சென்றுள்ளது. அம்மாவின் மறைவிற்குப் பின்னர், இந்த அரசின் ஆட்சி நீடிக்காது, ஆட்சி மாறி விடும் என்றெல்லாம் சிலர் கூறி வந்தனர்.

ஆனால், அம்மா காட்டிய வழியில், அவர் தம் நல்லாசிகளுடன் முதல்வரின் தலைமையில் மிகத் திறமையுடன் செயல்பட்டு வரும் அம்மாவின் அரசு, அனைத்து விமர்சகர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் கருத்துக்களைப் பொடிப்பொடியாக்கி தொடர்ந்து நல்லாட்சி புரிந்து வருவது மட்டுமல்லாமல், மென்மேலும் வலுவடைந்து, மக்கள் நம்பிக்கையைப் பூரணமாகப் பெற்று, பீடுநடை போட்டு வருகிறோம். உள்நாடு மட்டுமல்லாமல், உலகெங்கிலும் இருந்தும் பாராட்டுக்கள் குவியும் வண்ணம் அம்மாவின் அரசின் செயல்பாடுகள் மிளிர்கின்றன.

2019-ம் ஆண்டிற்கான சிறந்த ஆட்சிக்கான, நல் ஆளுமை விருதினை மத்திய அரசிடமிருந்து தமிழ்நாடு அரசு பெற்றுள்ளது. நாங்கள் தமிழ்நாட்டை தொடர்ந்து அமைதிப் பூங்காவாக விளங்கச் செய்து வருகிறோம். நிலையான, கணிக்கத்தக்க, அனைவருக்கும் இசைவான கொள்கைகளுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். அனைவரும் எளிதில் அணுகி, முறையீடுகள், ஆலோசனைகள் மற்றும் உண்மையான குறைகளுக்கு நியாயமான மற்றும் விரைவான பதில்கள் கிடைக்கும் வகையில் இந்த அரசு செயலாற்றி வருகிறது. நாங்கள் மக்களின் கோரிக்கைகளைக் கேட்டு அதற்கு உடனடியாகத் தீர்வு வழங்கி வருகின்றோம்.

நாங்கள் சமூகத்தில் உள்ள மிக ஏழ்மை நிலையில் உள்ளவர்களையும் பாதிப்பிற்குள்ளாகக் கூடியவர்களின் குறைகளையும் போக்கி வருகின்றோம். அறிஞர்களின் மதிநுட்ப ஆலோசனைகளுக்கு செவி சாய்த்து, அவர்களின் அறிவுரைகளின் பேரில் நாங்கள் செயல்பட்டு வருகிறோம்.ஆர்வம், அர்ப்பணிப்பு மற்றும் ஆய்ந்த அறிவுடன் நாங்கள் திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகிறோம். பல பன்னாட்டு நிதி நிறுவனங்களும், முதலீட்டாளர்களும் முதலீடு செய்ய மிகவும் விரும்புகின்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. மக்கள் அமைதியாக வாழ்வதற்கும், அவர்களின் இலட்சியங்களை அடைவதற்கும், எளிதில் அரசினை அணுகி, அவர்களின் தேவைகளை நிறைவு செய்யும் மாநிலமாக தமிழகத்தை உருவாக்கியுள்ளோம். நம் மாநிலத்தில், சட்டம் ஒழுங்கை தொடர்ந்து திறம்பட நிலைநாட்டி, மக்கள் பாதுகாப்பு உணர்வுடன் நல்வாழ்வு வாழ்வதை இவ்வரசு தொடர்ந்து உறுதி செய்யும்.

தொடர்ச்சியாகப் பெறப்படும் முதலீடுகளும், சிறப்பான பொருளாதார நடவடிக்கைகளும், மக்களுக்கு மேன்மேலும் வேலைவாய்ப்புகளையும் வருமானத்தையும் உருவாக்கித் தரும். ஏழை எளியோர், நலிவுற்றோர் மற்றும் அடித்தட்டு மக்கள் பாதுகாக்கப்படுவதை இந்த அரசு முனைப்புடன் உறுதி செய்யும். ‘எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்’ என்னும் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்கும் பல்வேறு நலத் திட்டங்கள் இந்த வரவு–செலவுத் திட்ட அறிக்கையில் அடங்கியுள்ளன. இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 1 week ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 3 days ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 6 months 4 weeks ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 6 months 4 weeks ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 7 months 3 weeks ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 3 weeks ago
View all comments

வாசகர் கருத்து