முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட்: எதிர்க்கட்சிகள் அமளியால் மாநிலங்களவை ஒத்திவைப்பு

திங்கட்கிழமை, 21 செப்டம்பர் 2020      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : மாநிலங்களவையில் நேற்று முன்தினம் வேளாண் மசோதாவை நிறைவேற்றும் போது விதிமுறைக்கு மாறாக நடந்து கொண்டதாக கூறி 8 எம்.பி.க்களை மாநிலங்களவைத் தலைவர் கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்ததை தொடர்ந்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டதால், அவை நாள்முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. 

மாநிலங்களவையில் கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரத்தில் 8 எம்.பி.க்கள் சஸ்பெண்ட் விவகாரத்தை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் எழுப்பி அமளியில் ஈடுபட்டதால், எந்த விதமான மசோதாக்களையும் நேற்று விவாதத்துக்கு எடுத்துக்கொள்ள முடியவில்லை. இதனால் அவையை இன்று காலை வரை ஒத்திவைப்பதாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு அறிவித்தார். 

மத்திய அரசு கொண்டு வந்த இரு வேளாண் மசோதாக்கள் மாநிலங்களவையில் நேற்று முன்தினம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் மத்தியஅரசு அறிமுகம் செய்தது.

அந்த மசோதாக்கள் மீது பல்வேறு திருத்தங்களைச் செய்யக்கோரியும், தேர்வுக்குழுவுக்கு அனுப்பக் கோரியும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தீர்மானம் கொண்டு வந்தனர்.

ஆனால், அந்த தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு குரல் வாக்கெடுப்பின் மூலம் மசோதாக்கள் நிறைவேறியதாக மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஸ் அறிவித்தார்.

இந்த மசோதா மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் காகிதங்களை கிழிதத்து அவையின் துணைத் தலைவர் மீது எறிய முயன்றனர், இதனால் அவையில் பெரும் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. 

இந்த சூழலில் மாநிலங்களவைத் துணைத் தலைவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தை கொண்டு வர நேற்று முன்தினம் 12 எதிர்க்கட்சிகள் சார்பில் மனு அளிக்கப்பட்டது.  எதிர்க்கட்சி எம்.பி.க்கள் வரம்பு மீறி நடந்து கொண்டதால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பா.ஜ.க. சார்பிலும் மனு அளிக்கப்பட்டது.  

இந்நிலையில் நேற்று காலை அவை கூடியதும் மாநிலங்களவைத் தலைவர் வெங்கையா நாயுடு, எதிர்க்கட்சிகள் மாநிலங்களவைத் துணைத்தலைவர் ஹரிவன்ஸ் மீது அளித்த நம்பிக்கையில்தாத் தீர்மானத்தை எடுக்க முடியாது என்று தெரிவித்தார். 

அப்போது அவர் கூறுகையில், பாராளுமன்றத்தின் நன்மதிப்பை, தோற்றத்தை சிதைத்து விட்டீர்கள்.  பாதுகாவலர்கள் சரியான நேரத்துக்கு வராவிட்டால், துணைத் தலைவருக்கு என்ன நடந்திருக்கும் என நினைத்து கவலைப்படுகிறேன். துணைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்க 14 நாட்கள் நோட்டீஸ் அளிக்க வேண்டும்.

இப்போது தீர்மானத்தை ஏற்க முடியாது.  அதேசமயம், அவையில் விதிமுறைகளை மீறி செயல்பட்ட திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. டேரீக் பிரையன், டோலா சென், ஆம் ஆத்மி எம்.பி. சஞ்சய் சிங், காங்கிரஸ் எம்.பி.க்கள் ராஜீவ் சத்சவ், சயத் நசீர் ஹூசேன், ரிபுன் போரா, இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. கேகே. ராகேஷ், இளமாறம் கரீம் ஆகியோரை கூட்டத்தொடர் முடியும் வரை சஸ்பெண்ட் செய்கிறேன் என உத்தரவிட்டார். 

இதனால் மாநிலங்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் முழுக்கமிட்டு, உத்தரவை திரும்பப் பெறக் கோரினார்கள். ஆனால், வெங்கையா நாயுடு மறுத்து விட்டார்.  இதையடுத்து கேள்வி நேரத்துக்கு பிந்தைய நேரத்திலும் எம்.பி.க்கள் சஸ்பெண்ட் உத்தரவை திரும்பப் பெறக் கோரி எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் எழுப்பி கூச்சலிட்டனர். இதனால் அவை 5 முறை ஒத்திவைக்கப்பட்டது.  நண்பகல் 12 மணி அளவில் புவனேஷ்வர் கலிதா அவையை நடத்தினார்.

அப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட எம்.பி.க்கள் அவையை விட்டு வெளியேறும்படியும், அவையின் மாண்பை பாதுகாக்கும்படியும் கேட்டுக் கொண்டார்.  ஆனால், எதிர்க்கட்சி எம்.பி.க்கள் அதற்கு மறுத்து அவையிலேயே தொடர்ந்து போராட்டம் நடத்தினர். இதனால், அவையை இன்று காலை வரை ஒத்திவைப்பதாக புவனேஷ்வர் கலிதா அறிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து