முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய சூளுரை ஏற்போம் : ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். அறிக்கை

சனிக்கிழமை, 15 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : எம்.ஜி.ஆர். பிறந்த நாளில் மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமைய சூளுரைப்போம் என்று ஓ.பன்னீர்செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும், எம்.ஜி.ஆரின் 105-வது பிறந்த நாளையொட்டி நல்வாழ்த்துக்களைக் கூறி மகிழ்கிறோம். 

நம் அன்புத் தலைவர் எம்.ஜி.ஆர். தனக்கென அவர் ஒருபோதும் வாழ்ந்ததில்லை. தன் திறமையாலும், உழைப்பாலும் பாடுபட்டு ஈட்டிய பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள பெரும் செல்வத்தை ஏழைகளுக்கும், எளியவர்களுக்கும், உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும், உயில் எழுதி வைத்து விட்டு மறைந்த கொடை வள்ளல்.  மழை போலும், மலர் போலும் பிறர்க்கென வாழ்ந்தவர்.

10ஆண்டுகள் ஆட்சி செய்தாலும், பலநூறு ஆண்டுகள் நிலைத்து நிற்கும் எடுத்துக்காட்டான திட்டங்களை நிறைவேற்றி, கருணை தீபமாய் ஒளிரும் ஆட்சி முறையை தமிழகத்திற்கு வழங்கியவர் நம் எம்.ஜி.ஆர். 

அவரை தலைமைச் சீடராக, அவரையே தனது மாதா, பிதா, குரு தெய்வமாகக் கொண்டு வாழ்ந்த அம்மாவிடம் 30 ஆண்டுகள் பயிற்சி பெற்ற நாம், எம்.ஜி.ஆர். வகுத்துத் தந்த பாதையில், அம்மாவின் வீரத்தோடும், விவேகத்தோடும் செயல்பட வேண்டிய காலம் இது என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

பொய் வாக்குறுதிகளை அள்ளி வீசி  ஒரு சில லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்திருக்கும் தி.மு.க. அரசின் திறமையற்ற, சுயநலம் மிக்க ஒரு குடும்ப ஆட்சியின் அலங்கோலங்களை தமிழகத்தில் அடியோடு வேரறுக்க நாம் அனைவரும் போர்பரணி பாடவேண்டிய நேரம் இது. எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோர் நடத்தியது போன்ற பொற்கால ஆட்சியை விரைவில் நிலைநாட்டிட நாம் சூளுரைக்க வேண்டிய நாள்தான் எம்.ஜி.ஆரின் பிறந்த நாள்.  தமிழகம் காக்க தன்னல ஆட்சியை அகற்றுவோம்.  கோட்டையிலே கோட்டையிலே நமதுகொடி பறந்திடவேண்டும். கொள்கை வீர தீபங்களை ஏற்றிடுவோம்.  இவ்வாறு அவர்கள் அதில் தெரிவித்துள்ளனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து