முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருச்சி உள்ளிட்ட 3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம்: புதிய திட்டங்களை தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சனிக்கிழமை, 26 நவம்பர் 2022      தமிழகம்
Stalin 2021 11 29

3 மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின் பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டந்தோறும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தும், புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கியும் வருகிறார். அதன் ஒரு பகுதியாக திருச்சி மற்றும் அரியலூர், பெரம்பலூர் ஆகிய 3 மாவட்டங்களில் 2 நாள் சுற்றுப்பயணம் செய்து பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார்.

அதன்படி வருகிற 28-ந்தேதி (திங்கட்கிழமை) காலை 9 மணிக்கு சென்னையிலிருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு திருச்சி வந்தடைகிறார். பின்னர் 10.15 மணிக்கு சாலை மார்க்கமாக திருச்சியை அடுத்த காட்டூர் பாப்பாக்குறிச்சி ஆதிதிராவிடர் பெண்கள் உயர்நிலைப்பள்ளிக்கு செல்கிறார். 

அங்கு பள்ளி மாணவர்களுக்கு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில் அங்கு 'ஸ்டெம் ஆன் வீல்ஸ்' என்ற புதிய நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். இது அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதத்தில் பள்ளி மாணவர்களிடையே கற்றலை ஊக்குவிப்பதன் மூலம் கல்வி முறையை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திட்டம் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் ஆகிய பாடங்களில் ஆங்கில வார்த்தையில் முதல் எழுத்துக்களை இணைத்து 'ஸ்டெம்' என்னும் வார்த்தை உருவகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தப் பாடங்களை தன்னார்வலர்கள் மூலம் இருசக்கர வாகனங்களில் சென்று மாணவர்களின் இருப்பிடத்திலேயே கற்றுத் தருவதற்காக ஸ்டெம் ஆன் வீல்ஸ் எனவும் பெயரிட்டுள்ளனர். இதில் இருசக்கர வாகனங்களில் பயிற்சி அளிக்க செல்லும் தன்னார்வலர்களை கொடியசைத்து வழி அனுப்பி வைக்கிறார்.

இந்த நிகழ்ச்சி நிறைவுற்றதும் அங்கிருந்து நேராக பெரம்பலூர் எறையூர் செல்கிறார். அங்கு கோத்தாரி சர்க்கரை ஆலையில் புதிய அலகினை மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். பின்னர் எறையூரில் அமையவுள்ள சிப்காட் தொழிற்பேட்டைக்கு அடிக்கல் நாட்டுகிறார். 

அதைத்தொடர்ந்து பெரம்பலூர் விருந்தினர் மாளிகைக்குச் சென்று சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரம் அருகேயுள்ள மாளிகைமேட்டில் நடைபெற்று வரும் இரண்டாம் கட்ட அகழ்வாராய்ச்சி பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிடுகிறார். இந்தப் பகுதியில் சமீபத்தில் பழங்கால மண் பானைகள், தங்க காப்புகள் கண்டெடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அங்கிருந்து மாலை 5.45 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரியலூர் விருந்தினர் இல்லம் செல்கிறார். இரவு அங்கு தங்கி ஓய்வு எடுக்கிறார். மறுநாள் 29-ந்தேதி (செவ்வாய்க்கழமை) காலை 9.15 மணிக்கு விருந்தினர் இல்லத்தில் இருந்து புறப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெறும் அரியலூர்-செந்துறை சாலையில் உள்ள கொல்லாபுரத்துக்கு செல்கிறார். பின்னர் அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களைச் சேர்ந்த பயனாளிகளுக்கு பல கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றுகிறார்.

இதில் பெரம்பலூர் மாவட்டத்தில் மட்டும் பல்வேறு திட்டங்கள் மூலம் ரூ.31 கோடியே 37 லட்சத்து 96 ஆயிரம் மதிப்பிலான 54 பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும், ரூ.221 கோடியே 80 லட்சத்து 28 ஆயிரம் செலவில் முடிவுற்ற 23 திட்டப்பணிகளை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தும், பல்வேறு அரசுத்துறைகள் மூலம் 9,621 பயனாளிகளுக்கு ரூ.26.2 கோடி மதிப்பிலான நலத்திட்டங்களையும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார்.

அதன் பின்னர் அரியலூரில் இருந்து திருச்சி விமான நிலையம் சென்று மதியம் 12.30 மணிக்கு தனி விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வருகையை முன்னிட்டு திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்களில் முன்னேற்பாடு பணிகள் வேகமாக நடந்து வருகின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து