முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கைதான கப்பல் இன்ஜினீயர் மீண்டும் தற்கொலை முயற்சி

திங்கட்கிழமை, 21 அக்டோபர் 2013      தமிழகம்
Image Unavailable

 

நெல்லை,அக்.22 - தூத்துக்குடியில் கைதான கப்பல் இன்ஜினீயர் மீண்டும் தற்கொலைக்கு முயன்றதால் பாளை மத்திய சிறையில் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி கடல் பகுதியில் ஆயுதங்களுடன் அத்துமீறி நுழைந்த அமெரிக்க தனியார் நிறுவன கப்பல் சிறைபிடிக்கப்பட்டது. அந்த கப்பலில் இருந்த ஊழியர்களில் 33 பேர் கைது செய்யப்பட்டு பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கப்பல் பராமரிப்பு பணிக்காக தலைமை இன்ஜினீயர் ஷிடரன்கோ வேளரி கடந்த 2 தினங்களுக்கு முன்பு கப்பலில் தூக்கிலிட்டு தற்கொலைக்கு முயன்றார். கப்பலில் காவலில் இருந்த போலீசார் அவரை தடுத்து மீட்டனர். இதையடுத்து போலீசார் அவரையும், கப்பல் கேப்டனையும் கைது செய்து பாளை மத்திய சிறையில் அடைத்தனர். சிறையிலும் கப்பல் இன்ஜினீயர் ஷிடரன்கோ வேளரி மனஉளைச்சலுடன் காணப்பட்டார். நேற்று முன்தினம் இரவு சக கைதிகள் தூங்கிகொண்டிருந்த நேரத்தில் அவர் திடீரென எழுந்து தனது சட்டையை கழற்றி தூக்கிட்டு தற்கொலை செய்ய முயன்றார். கண்காணிப்பில் இருந்த சிறை வார்டன்கள் இதனை பார்த்து தடுத்தனர். அவர் என்னை விடுதலை செய்யாவிட்டால் தற்கொலை செய்து கொள்வேன் என்று தொடர்ந்து கூறிவருகிறார். இதையடுத்து போலீசார் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் பாளை மத்திய சிறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கப்பல் ஊழியர்கள் 35 பேரையும் விடுவிக்கக்கோரி கப்பல் நிறுவனம் சார்பில் வக்கீல்கள் சிலர் தூத்துக்குடி மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நேற்று மனு தாக்கல் செய்துள்ளனர். இந்தநிலையில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கப்பல் ஊழியர்கள் 35 பேரில் 14 பேர் எஸ்தோனியா நாட்டைச் சேர்ந்தவர்கள் 6 பேர் இங்கிலாந்து நாட்டினர். அவர்களை சந்திப்பதற்காக சென்னை மற்றும் டெல்லியில் உள்ள அந்நாட்டு தூதரக அதிகாரிகள் நேற்று நெல்லை வந்தனர். சென்னையில் உள்ள இங்கிலாந்து நாட்டு தூதரக அதிகாரி ராணாராயல், பெண் அதிகாரி மார்க்கஸ் கார்ஜிலெப், டெல்லியில் உள்ள எஸ்தோனியா நாட்டு தூதரக பெண் அதிகாரி பெட்டுலா ஜேம்ஸ் ஆகிய 3 பேரும் விமானம் மூலம் தூத்துக்குடி வந்தனர். பின்பு அவர்கள் அங்கிருந்து கார் மூலம் பாளை மத்திய சிறைக்கு காலை 10.30 மணிக்கு வந்தனர். பின்பு சிறைக்குள் சென்று தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்களை சுமார் 2 மணி நேரம் சந்தித்து பேசினர். இந்திய கடல் எல்லைக்குள் நுழைந்தது உள்ளிட்ட விவரங்கள் குறித்தும், அவர்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகள் பற்றியும் கேட்டறிந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்