முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கிம் டேவியை இந்தியா அனுப்ப டென்மார்க் மறுப்பு

வெள்ளிக்கிழமை, 8 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,ஜூலை.8 - கிம் டேவியை விசாரணைக்காக இந்தியா அனுப்ப டென்மார்க் மறுத்துள்ளது ஏமாற்றம் அளிப்பதாக மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளார். 

மேற்கு வங்க மாநிலம் புரூலியாவில் கடந்த 1995 ம் ஆண்டு விமானம் மூலம் ஆயுதங்கள் வீசப்பட்ட விவகாரத்தில் முக்கிய குற்றவாளி கிம் டேவி. ஆனால் அவரை விசாரணைக்காக இந்தியா அனுப்ப டென்மார்க் நீதிமன்றம் சமீபத்தில் அனுமதி மறுத்து விட்டது. இது இந்த வழக்கில் பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. 

இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், கிம் டேவி விவகாரத்தில் டென்மார்க் அரசு எடுத்த முடிவு மிகுந்த ஏமாற்றமளிக்கிறது. இந்தியாவில் விசாரிக்கும் போது அவர் துன்புறுத்தப்படுவார். மனித உரிமைகள் மீறப்படும் என்ற வாதத்தை ஏற்றுக் கொள்ளவே முடியாது. 

கிம்டேவியை இந்தியாவிடம் விசாரணைக்காக ஒப்படைப்பது தொடர்பான அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்குமாறு வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இந்த விவகாரத்தில் டென்மார்க் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இன்னும் வாய்ப்பு உள்ளது. எனவே கிம் டேவியை விசாரணைக்காக இந்தியா கொண்டு வர தொடர்ந்து தீவிர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். 

தொடர்ந்து நக்சல் பிரச்சினை குறித்து பேசிய சிதம்பரம், நக்சல் பிரச்சினை உள்ள மாநில முதல்வர்களின் கூட்டத்தை மத்திய அரசு விரைவில் கூட்டவிருக்கிறது என்றார். நக்சல், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் போதிய பயிற்சியில்லாத பழங்குடியினத்தை சேர்ந்த சிறப்பு போலீஸ் படையை பயன்படுதத வேண்டாமென்று சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு குறித்த கேள்விக்கு, நீதிமன்றத்தின் உத்தரவை இன்னும் முழுமையாக படிக்கவில்லை. இந்த விஷயத்தில் நீதிமன்றம் பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி உள்ளது. இதில் சில பகுதிகள் சிக்கலானவை. இது குறித்தும் மாநில முதல்வர்கள் கூட்டத்தில் விவாதிக்கப்படும். அதன் பின்னர் நக்சல்களை ஒடுக்கும் முயற்சியில் அடுத்த கட்ட நடவடிக்கை முடிவு செய்யப்படும் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்