முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேனியில் தீக்குளித்து மரணமடைந்தவர் குடும்பத்துக்கு 1லட்சம் உதவி

புதன்கிழமை, 4 ஜனவரி 2012      தமிழகம்
Image Unavailable

சென்னை, ஜன.- 4 - முல்லை பெரியாறு அணை தொடர்பாக தனது இன்னுயிரை மாய்த்துக் கொண்ட தேனி நகர், பங்களா மேடு பகுதியில் வசித்த ஜெயப்பிரகாஷ் நாராயணன் என்பவரின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் ஜெயலலிதா உத்தரவுப் படி நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம், ஆறுதல் கூறி அண்ணா தி.மு.க நிதியிலிருந்து ரூ.1லட்சம் நிதியினை வழங்கினார். தேனி நகரில் உள்ள பங்களாமேடு பகுதியில் வசித்தவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன் (31). இவர் தனியார் வேன் டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த 19.12.2011 அன்று, தேனி நகரில் உள்ள நேரு சிலை அருகில், முல்லைப் பெரியாறு அணை பிரச்சினையில் நல்ல தீர்வு ஏற்பட வேண்டும் என்றும், அதற்காக உயிர் தியாகம் செய்வதாகவும் கூறி, தனது உடலில் பெட்ரோலை ஊற்றிக்கொண்டார். உடனே காவல் துறையினர் அவரை தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அரசு உத்தரவுப்படி சிறப்பான மேல் சிகிச்சைகாக மதுரையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் நேற்று முன்தினம் (2-ந்தேதி) மாலை ஜெயப்பிரகாஷ் நாராயணன் சிகிச்சை பலனின்றி மரண மடைந்தார். இதனை அறிந்த முதலமைச்சர் ஜெயலலிதா உடனடியாக நிதி அமைச்சர் ஒ.பன்னீர்செல்வத்தை தேனி நகரில் உள்ள ஜெயப்பிரகாஷ் நாராயணன் வீட்டிற்கு நேரில் அனுப்பி அண்ணா தி.மு.க சார்பில் ரூ.1லட்சம் தொகையினை இறந்தவரின் குடும்பத்தினர்களுக்கு வழங்கி ஆறுதல் கூறி வர அனுப்பி வைத்தார். அதன்படி நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தேனி நகருக்கு  உடனடியாக புறப்பட்டு வந்து இறந்தவரின் தாயாரிடம் கழக நிதியான ரூ.1 லட்சம் தொகையினை வழங்கி அவருக்கும், அவரது குடும்பத்தினர்களுக்கும் ஆறுதல் கூறினார். அப்போது தேனி மாவட்ட செயலாளரும் மற்றும் கம்பம் நகர்மன்றத் தலைவருமான சிவக்குமார், தேனி நகர்மன்றத் தலைவர் முருகேசன், மாவட்ட ஊராட்சித்தலைவர் மகாலிங்கம், பெரியகுளம் ஊராட்சி ஒன்றிய தலைவர் செல்லமுத்து, முன்னாள் மக்களவை உறுப்பினர் சையதுகான், தேனி நகர்மன்ற துணைத் தலைவர் காசிமாயன், மாவட்ட அண்ணா தி.மு.க துணை செயலாளர் முருக்கோடை ராமர், தேனி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆர்.டி.கணேசன், போடி தொகுதி செயலாளர் போதுமணி மற்றும் அண்ணா தி.மு.க நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்