முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகத்தில் மே 30 வரை மிதமான மழை வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்

வெள்ளிக்கிழமை, 24 மே 2024      தமிழகம்
Weather-Center 1

சென்னை,  தமிழகத்தில் இன்று (மே 25) முதல் 30-ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு.,

மத்திய மேற்கு மற்றும் அதனை ஒட்டியுள்ள தெற்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று நேற்று (24.05.2024) காலை 05:30 மணி அளவில் மத்திய வங்கக் கடல் பகுதிகளில் நிலவியது. இது வடகிழக்கு திசையில் நகர்ந்து நேற்று காலை 08:30 மணி அளவில் மத்திய வங்கக்கடல் பகுதிகளில் வங்கதேச - கேப்புப்பாராவிலிருந்து சுமார் 730 கி.மீ தெற்கு - தென்மேற்கேயும் மற்றும் மேற்கு வங்காள - கேன்னிங்-லிருந்து சுமார் 750 கி.மீ தெற்கேயும் மையம் கொண்டுள்ளது.

இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்து, புயலாக வலுப்பெற்று, 25.05.2024 காலை மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது வடக்கு திசையில் நகர்ந்து, தீவிர புயலாக இன்று இரவு வலுப்பெற்று, 26.05.2024 நள்ளிரவு தீவிர புயலாக வங்கதேசம் மற்றும் அதனை ஒட்டியுள்ள மேற்கு வங்க கடற்கரையை கடக்க கூடும். இதனிடையே, தெற்கு கேரள மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

இன்று (மே 25) முதல் 30.05.2024 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு: அடுத்த 48 மணி நேரத்துக்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். இன்று குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய தென்தமிழக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து