முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பா.ஜனதா – இந்து முன்னணி தலைவர்களுக்கு மிரட்டல்

செவ்வாய்க்கிழமை, 29 ஜூலை 2014      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஜூலை.30 – வேலூர் இந்து முன்னணி தலைவர் வெள்ளையப்பன், சேலம் பா.ஜனதா நிர்வாகி ஆடிட்டர் ரமேஷ், திருவள்ளூர் மாவட்ட இந்து முன்னணி செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட 6 முக்கிய பிரமுகர்கள் படுகொலை செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக சென்னை சிந்தாதிரிபேட்டையில் உள்ள இந்து முன்னணி அலுவலகத்துக்கும் மிரட்டல் கடிதங்கள் வந்தன. அதுபற்றி இந்து முன்னணி நிர்வாகிகள் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பலமுறை புகார் செய்துள்ளனர். அம்பத்தூரில் நடந்த் கொலைக்கு சில நாட்களுக்கு முன்பும் இது போன்ற மிரட்டல் கடிதம் வந்திருந்தது.

இந்நிலையில் மீண்டும் சிந்தாதிரிபேட்டையில் உள்ள மாநில இந்து முன்னணி அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் ஒரு மர்ம கடிதம் வந்தது. அதை இந்து முன்னணி நிர்வாகிகள் படித்து பார்த்தனர்.

அதில் இந்து இயக்கம் மற்றும் தமிழக பாரதீய ஜனதா தலைவர்களை கொலை செய்யப் போவதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த இந்து முன்னணி நிர்வாகிகள் மனோகர், பரமேசுவரன், முருகேசன், இளங்கோவன், கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் நேற்று காலை சிந்தாதிரிபேட்டை போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் மனு கொடுத்தனர். இன்ஸ்பெக்டர் இளங்கோ அதை பெற்றுக் கொண்டார். அதில் கூறி இருப்பதாவது:–

இஸ்லாத்தை இழிவு படுத்தியும் எங்கள் அன்பு மதத்தை கொச்சைப் படுத்தியும் பேசி, துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்து வருபவர்களை ‘குர்பானி’ இடுவோம். சென்னையில் பி.ஜே.பி.யில் ‘தீ’ என்றாலும் தஞ்சையில் ‘ம்’ என்றாலும், சிவகங்கையில் ‘ஜா’ என்றாலும், கோவையில் ‘ஸ்’ என்றாலும், திருச்சியில் ‘ர்’ என்றாலும், விருதுநகரில் ‘தீ’ என்றாலும் முன்னணியில் சென்னை ‘ன்’ என்றாலும், திருப்பூர், கோவையில் ‘ணி’ என்றாலும், நெல்லையில் ‘ஜா’ என்றாலும் அனைவரும் துன்பத்துக்கு ஆளாவர்கள்.

இப்படிக்கு இம்மாமலை சகோதரர்கள், மத்வா குழு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அனுப்புவோர் விலாசம் பாலக்காடு, கேரளா என்று எழுதியுள்ளது.

இந்து முன்னணியினர் கொடுத்த புகாரில் இது போன்று வந்த ஒரு கடிதத்தை அலட்சியப்படுத்தியதால் பாபு, சுரேஷ் கொல்லப்பட்டனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் கடிதத்தில் 9 பெயர்கள் குறிப்பிட்ட எழுத்துக்கள் மூலம் மறைமுகமாக சொல்லப்பட்டுள்ளது. சுரேஷ் குமார் கொலை ஏற்படுத்திய பரபரப்பு அடங்கும் முன்பு இந்த மர்ம கடிதம் வந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

இது குறித்து சிந்தாதிரி பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். மிரட்டல் ஆசாமிகளை பிடிக்க வலை விரிக்கப்பட்டுள்ளது. இந்து முன்னணி அலுவலகத்துக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்