முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

விருத்தாசலம் அருகே ரயில் விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ 50 ஆயிரம் முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு

வெள்ளிக்கிழமை, 4 செப்டம்பர் 2015      தமிழகம்
Image Unavailable

சென்னை, விருத்தாசலம் அருகே ரயில் தடம்புரண்டதில் பலத்த காயமடைந்த 39 பேருக்கு தலா 50 ஆயிரமும் சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா ரூ 25 ஆயிரமும் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.

இது குறித்து முதலமைச்சர் ஜெயலலிதா வெளியிட்ட அறிக்கை வருமாறு:

கடலூர் மாவட்டம், விருத்தாச்சலம் வட்டம், பெரியவடவாடி அருகே நேற்று (4.9.2015) அதிகாலை சென்னை, எழும்பூரிலிருந்து மங்களூர் நோக்கி சென்று கொண்டிருந்த மங்களூர் விரைவு ரயிலின் கடைசி இரு பெட்டிகள் தடம் புரண்டதில் 39 நபர்கள் காயமடைந்தனர் என்ற செய்தியை அறிந்து நான் மிகவும் வருத்தம் அடைந்தேன். இவர்களில் 35 நபர்கள் புறநோயாளியாக சிகிச்சைப் பெற்று திரும்பி விட்டனர். காயமடைந்த கோயம்புத்தூர் மாவட்டம், ஒத்தப்பாலத்தைச் சேர்ந்த . கண்ணன் என்பவரின் மனைவி பார்வதி, கரூர் மாவட்டம், மூலப்பட்டியைச் சேர்ந்த . ரங்கசாமி என்பவரின் மனைவி சின்னம்மாள், திருச்சிராப்பள்ளி மாவட்டம், முசிறியைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் பத்மநாபன் மற்றும் சென்னை, புதுப்பேட்டையைச் சேர்ந்த சீனிவாசன் என்பவரின் மகன் பரஞ்சோதி ஆகியோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

இந்தச் செய்தி குறித்த தகவல் எனக்கு கிடைக்கப் பெற்றவுடன், எனது உத்தரவின் பேரில் கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர், வருவாய் அலுவலர்கள், காவல் துறை, சுகாதாரத் துறை, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை அலுவலர்கள் ஆகியோர் ரயில் விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து சென்று, பாதிக்கப்பட்ட ரயில் பயணிகளுக்கு தேவையான அவசரக் கால உதவிகளையும், காயமடைந்தவர்களை மருத்துமனைக்கு அழைத்துச் சென்று உரிய சிகிச்சை அளிக்கவும் தக்க ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

எனது ஆணையின் பேரில், பாதிக்கப்பட்ட பயணிகள் அரசுப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகள் மூலம் அவரவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல மாற்று வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருபவர்களுக்கு நல்ல முறையில் சிகிச்சை அளிக்க கடலூர் மாவட்ட நிருவாகத்திற்கும், மருத்துவமனை அதிகாரிகளுக்கும் நான் உத்தரவிட்டுள்ளேன். காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்கள் அனைவரும் விரையில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்ற எனது விருப்பத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த ரயில் விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50,000/- ரூபாயும், சாதாரண காயமடைந்தவர்களுக்கு தலா 25,000/- ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க நான் உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்