முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீத்தேன் - ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு அனுமதி கொடுத்தது தி.மு.க ஆட்சியில்தான் - சட்டசபையில் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பதிலடி

புதன்கிழமை, 19 ஜூலை 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை : தி.மு.க ஆட்சியில் தான் மீத்தேன், ஹைட்ரோ கார்பன் திட்டங்களுக்கு ஒப்புதல் தரப்பட்டது என்று சட்டசபையில் மு.க.ஸ்டாலினுக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதிலடி கொடுத்துள்ளார்.

பல்வேறு அமைப்பினர் ...

தமிழக சட்டசபையில் நேற்று பொதுத்துறை, மாநிலச் சட்டமன்றம், ஆளுநர் மற்றும் அமைச்சரவை, நிதித்துறை, பணியாளர் மற்றும் நிருவாக சீரதிருத்தத்துறை, திட்டம் வளர்ச்சி மற்றும் சிறப்பு முயற்சிக்கள் துறை, ஓய்வூதியங்களும், ஏனைய ஓய்வூக்கால நன்மைகளும் ஆகிய துறைகளின் மீதான மானியக்கோரிக்கையில் பங்கேற்று எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, போராட்டங்கள் நடத்துவது தவறு என்று நான் சொல்லவில்லை. தங்களது உரிமையை கேட்க பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்துகின்றனர். ஆனால், அப்படி போராட்டம் நடைபெறுகிற போது பொறுப்பில் இருக்கின்ற ஆட்சியாளர்கள் அவர்களை அழைத்து பேசி அதற்குரிய பரிகாரத்தை கண்டு, அந்தப் போராட்டங்களுக்கு முடிவு காணக்கூடிய வகையில் உங்களுடைய பணி அமைய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

நெடுவாசல் போராட்டம்

அப்போது குறுக்கிட்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, போராட்டங்கள் வல்லரசு நாடுகளிலும் நடைபெற்று வருகிறது. போராட்டத்திற்கு அனுமதி அளித்து அதனைத் தொடர்ந்து கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதனைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், நெடுவாசல் போராட்டம் இன்றோடு (நேற்று) நூறாவது நாள், அதனால்தான் அதை சொல்கிறேன் என்று கூறினார்.

தி.மு.க ஆட்சியில்தான் ...

அப்போது குறுக்கிட்டு முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, போராட்டகாரர்கள் சந்திக்க அனுமதிக்கேட்டால் நிச்சயம் அனுமதி கொடுக்கிறோம். நெடுவாசலில் மத்திய அரசிற்கு எதிராகத்தான் போராட்டம் நடத்துகிறார்கள். மாநில அரசுக்கு எதிராக அல்ல. விவசாயிகளை பாதிக்கும் எந்த திட்டத்தையும் இந்த அரசு செயல்படுத்தாது. 1989-ம் ஆண்டு ஹைட்ரோ கார்பன் திட்டம் தி.மு.க ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது. அப்போதே இவ்வளவு பாதிப்பு வரும் என்பதை தெரிந்து அனுமதிக்காமல் இருந்திருந்தால், இதுபோன்ற பிரச்சனையே வந்திருக்காது.

உண்மைதான் ...

அதனைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், மீத்தேன் திட்டம் கொண்டுவர ஓப்பந்தம் கையெழுத்திடப்பட்டது என்பதுதான் உண்மை. அந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்துப் போடப்படுகின்ற நேரத்தில், அதை ஆய்வு செய்து, மக்களுடைய கருத்துகளை அறிந்து, அதற்கு பிறகு அந்த திட்டம் வரும் என்று தான் அந்த ஒப்பந்தம் போடப்பட்டதே தவிர திட்டம் வருவதற்காக கையெழுத்துப் போடப்படவில்லை. ஆனால், அதற்கு பிறகு ஆட்சி மாற்றம் வந்தப் பிறகு, உங்களுடைய ஆட்சிக்காலத்தில்தான் அந்த மீத்தேன் திட்டம் வந்து சேர்ந்திருக்கிறது.

உற்பத்தி பகிர்வு ஒப்பந்தம்

அப்போது குறுகிட்ட மின்துறை அமைச்சர் தங்கமணி, மீத்தேன் திட்டத்திற்கு 4.1.2011 அன்று ஒப்பந்தம் போட்டு, உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவு போட்டுள்ளீர்கள். அதனைத் தொடர்ந்து எதிர்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், ஆய்வுப்பணிக்குரிய நடவடிக்கைகளை எடுக்கத்தான் உத்தரவு போட்டிருக்கிறதே தவிர, அந்த பணியை தொடங்குவதற்கு எந்த உத்தரவு அல்ல. அப்போது குறுக்கிட்ட முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய பெட்ரோலிய மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சரகம் தமிழகத்தில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம், ஒரத்தநாடு, பாபநாசம், திருபனந்தாள் மற்றும் திருவிடைமருதூர் ஆகிய தாலுக்காகளிலும், திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி, குடவாசல், நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் ஆகிய தாலுக்காகளிலும் பூமிக்கு அடியிலிருந்து மீத்தேன் வாயுவை கிணறுகள் மூலம் பிரித்தெடுக்க கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் என்ற தனியார் நிறுவனத்திற்கு 29.7.2010 அன்று ஏலத்தின் மூலம் ஒதுக்கீடு செய்து, மத்திய அரசு உற்பத்தி பகிர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தியது.

புரிந்துணர்வு ஒப்பந்தம் ...

இதனைத் தொடர்ந்து, மேற்படி நிறுவனம் நிலக்கரி படுகை மீத்தேன் வாயு ஆய்வு மற்றும் உற்பத்தியைத் துவக்க பெட்ரோலியம் ஆய்வு உரிமம் கோரி தமிழ்நாடு அரசுக்கு 28.10.2010 அன்று விண்ணப்பித்தது. அதன் அடிப்படையில் முந்தைய தி.மு.க அரசு, மேற்படி ஜிஇஇசிஎல் நிறுவனம் அத்திட்டத்திற்கான பணிகளை மேற்கொள்ள 1.1.2011 அன்று அரசாணை மூலம் தஞ்சாவூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத் துறையின் கடிதம், மற்றும் திருவாரூர் மாவட்ட சுரங்கத் துறையின் கடித்தின்படி அனுமதி வழங்கி ஆணை பிறப்பித்தது. இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்காக 4.1.2011 அன்று தமிழ்நாடு அரசின் சார்பில் அப்போதைய தொழில் துறை முதன்மைச் செயலாளர் மற்றும் கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் நிறுவனத்தைச் சார்ந்த யோகேந்திர குமார் மோடி ஆகியோருக்கிடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.  என்று முதல்வர் பதிலளித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து