முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும்? வானிலை மையம் அதிகாரப்பூர்வ தகவல்

செவ்வாய்க்கிழமை, 17 அக்டோபர் 2017      தமிழகம்
Image Unavailable

சென்னை :  தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை வரும் 25ஆம் தேதிக்கு பிறகுதான் தொடங்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை இயல்பை அதிகமாகவே பெய்துள்ளது. இதனால் தமிழகத்தில் உள்ள நீர் நிலைகள் நிரம்பியுள்ளன. அதேநேரத்தில் கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் கொட்டித் தீர்க்கும் மழையால் தமிழகத்திற்கு நீர்வரத்தும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வறட்சி கடந்த ஆண்டு தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை பொய்த்துப்போனதால் பெரும் வறட்சி ஏற்பட்டது.

சென்னை, வேலூர், தருமபுரி, அரியலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டதால் மக்கள் குடத்தை தூக்கிக்கொண்டு தெருதெருவாக அலைந்தனர். இதைத்தொடர்ந்து இந்தாண்டாவது பருவமழை பெய்யுமா என்ற எதிர்ப்பார்ப்பு மக்களிடையே அதிகரித்துள்ளது. இந்நிலையில் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது தமிழகத்தில் வடகிழக்குப்பருவ மழை வரும் 25ஆம் தேதிக்கு பின்னர்தான் தொடங்கும் என தெரிவித்தார்.

தென்மேற்கு பருவமழை இன்னும் நீடிப்பதாகவும் பாலச்சந்திரன் கூறினார். தென்மேற்கு பருவமழை வலுவிழந்தால் மட்டுமே வடகிழக்குப் பருவமழை தொடங்கும் என்றார். மேலும் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்றும் அவர் கூறினார். மத்திய வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் நீடிப்பதாக அவர் கூறினார். அடுத்த 24 மணி நேரத்தில் இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இதனால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்கள் மற்றும் வட தமிழகத்தில் மழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்தார். 2 நாட்களுக்குப் பிறகு தமிழகத்தில் படிப்படியாக மழை குறையும் என்றும் அவர் கூறினார். சென்னையை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்தார்

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து