முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய விமானப்படை கான்வாய் மீது நடந்த பயங்கரவாத தாக்குதல் : கார்கே, ராகுல் காந்தி கண்டனம்

ஞாயிற்றுக்கிழமை, 5 மே 2024      இந்தியா
Karke-Rahul 2023 04 18

Source: provided

புதுடெல்லி : காஷ்மீரில்  இந்திய விமானப்படை கான்வாய் மீது நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல் சம்பவத்திற்கு காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜூன கார்கே, ராகுல் காந்தி ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர். 

ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் ஜரண்வாலியிலிருந்து சூரன்கோட் விமானப் படை தளத்துக்கு வீரா்கள் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் திரும்பி கொண்டிருந்தனா். அப்போது சசிதா் பகுதியருகே வீரா்கள் பயணித்த இரண்டு வாகனங்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தினா். வீரா்களும் பதில் தாக்குதல் நடத்தினர். 

இதையடுத்து, வனப்பகுதி வழியாக பயங்கரவாதிகள் தப்பியோடினா். இந்தத் துப்பாக்கிச்சூட்டில் 5 பாதுகாப்புப் படை வீரா்கள் காயமடைந்தனா். அவா்கள் அருகில் இருக்கும் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். அங்கு சிகிச்சை பலனின்றி வீரா் ஒருவா் வீரமரணமடைந்தாா். மற்றொரு வீரரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது. 

தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்துக்கு விரைந்த ராணுவம் மற்றும் காவல் துறையினா், அந்த பகுதியை சுற்றி வளைத்து தப்பியோடிய பயங்கரவாதிகளை தேடி வருகின்றனா். 

இந்நிலையில், இந்திய விமானப்படை வீரரின் மரணத்திற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ஜம்மு  காஷ்மீரின் பூஞ்ச் என்ற இடத்தில் ஐ.ஏ.எப். வாகனத்தின் மீது நடந்த கோழைத்தனமான பயங்கரவாதத் தாக்குதலால் ஆழ்ந்த வேதனையடைகிறோம். இந்த கொடூரமான பயங்கரவாதத் தாக்குதலை நாங்கள் கடுமையாகவும், சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிக்கிறோம். 

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றாக நிற்க தேசத்துடன் இணைகிறோம். உயர்ந்த தியாகம் செய்த துணிச்சலான விமானப் போராளியின் குடும்பத்திற்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம். காயமடைந்த விமான வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். 

மேலும் அவர்களின் நலனுக்காக மனப்பூர்வமாக பிரார்த்தனை செய்கிறோம். நமது வீரர்களுக்காக இந்தியா ஒன்றுபட்டுள்ளது என்று அதில்  கார்கே பதிவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில், ஜம்மு காஷ்மீர் மாநிலம் பூஞ்ச் பகுதியில் ராணுவ வாகனத்தின் மீது நடத்தப்பட்ட கோழைத்தனமான பயங்கரவாத தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது. 

வீரமரணம் அடைந்த ராணுவ வீரருக்கு எனது பணிவான அஞ்சலியை செலுத்துவதுடன், அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கு எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். இத்தாக்குதலில் காயமடைந்த வீரர்கள் விரைவில் குணமடைய வேண்டும்  என்று அதில் அவர் பதிவிட்டுள்ளார்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து