ஸ்ரீநகர் : சுதந்திர தினத்தின் போது ஸ்ரீநகரில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேசியக்கொடி ஏற்றுவார் என்று தகவல்கள் கூறுகின்றன.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து ரத்து மற்றும் அந்த மாநிலத்தை 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் நடவடிக்கைகளுக்கு மாநிலத்தில் பரவலாக கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. எனவே பாதுகாப்பு காரணங்களுக்காக அங்கு ஊரடங்கு, தொலைதொடர்பு சேவைகள் துண்டிப்பு உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன. மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிராகவும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுதந்திர தினத்தன்று காஷ்மீர் பிராந்தியத்தின் ஸ்ரீநகரில் உள்ள லால்சவுக் பகுதியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தேசியக்கொடி ஏற்றுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது. எனினும், ஜம்மு காஷ்மீர் காவல்துறை தலைமையகம் இந்த தகவலை உறுதி செய்யவில்லை. காஷ்மீர் விவகாரத்தில் இந்தியா - பாகிஸ்தான் இடையேயான உறவில் பதற்றம் நிலவுவதால், பாதுகாப்பு காரணங்களுக்காக அமித்ஷாவின் பயணம் முன்கூட்டியே தெரிவிக்கப்படாது என்றும் பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.