முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அத்தி வரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு

வியாழக்கிழமை, 15 ஆகஸ்ட் 2019      ஆன்மிகம்
Image Unavailable

காஞ்சிபுரம் : அத்தி வரதர் தரிசனம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.

காஞ்சிபுரம், வரதராஜ பெருமாள் கோவிலில் அத்திவரதர் விழா கடந்த மாதம் 1-ம் தேதி தொடங்கி விமரிசையாக நடந்து வருகிறது. முதல் 31 நாட்கள் சயன கோலத்தில் காட்சியளித்த அத்திவரதர் இந்த மாதம் 1-ம் தேதி முதல் நின்ற கோலத்தில் பக்தர்களுக்கு தரிசனம் அளித்து வருகிறார். அத்திவரதரை வழிபட தினந்தோறும் பக்தர்கள் குவிந்து வருகிறார்கள். அத்திவரதர் தரிசனம் இன்றுடன் (16-ம் தேதி) முடிவடைகிறது. இதனால் கடந்த ஒரு வாரமாக அத்தி வரதர் தரிசனத்துக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்தவும், பக்தர்கள் ஓய்வு எடுக்கவும் ஆங்காங்கே கூடாரங்கள் அமைக்கப்பட்டும் பக்தர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் வசதி செய்யப்பட்டு உள்ளது.

நேற்று முன்தினம் இரவு 9 மணி முதல் 11 மணி வரை காஞ்சிபுரத்தில் பலத்த மழை கொட்டியது. மழையையும் பொருட்படுத்தாமல் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து அத்திவரதரை தரிசித்து சென்றனர். நேற்றும் சுமார் 5 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்தனர். விழாவின் 46-வது நாளான நேற்று அத்திவரதர் மலர்களால் புஷ்ப அங்கி அலங்காரத்தில் அருள்பாலித்தார். நேற்று சுதந்திர தின விடுமுறை நாள் என்பதாலும், இன்றுடன் அத்திவரதர் தரிசனம் முடிவடைய உள்ளதாலும் காலையிலேயே சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்தனர்.

வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று ஆடி கருட சேவை நடைபெற்றது. இதையொட்டி நேற்று மதியம் 12 மணியுடன் அத்திவரதர் தரிசனத்துக்காக கிழக்கு கோபுர வாசல் நடை சாத்தப்பட்டது. இதே போல் முக்கிய பிரமுகர்களுக்கான தரிசன வாயிலும் நேற்று மதியம் 12 மணிக்கு அடைக்கப்பட்டது.

கோவிலின் உள்ளே இருந்த பக்தர்கள் மட்டும் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை அத்திவரதர் தரிசனம் முழுமையாக ரத்து செய்யப்பட்டது. கருடசேவை விழா முடிந்ததும் இரவு 8 மணிக்கு மேல் நள்ளிரவு வரை வழக்கம் போல் பக்தர்கள் தொடர்ந்து அத்திவரதரை தரிசிக்க அனுமதிக்கப்பட்டனர். விழாவின் இறுதி நாளான இன்று பொது தரிசனத்தில் மட்டும் பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். வி.ஐ.பி. தரிசனம் கிடையாது. பொது தரிசனத்தில் செல்லக் கூடிய பக்தர்கள் மாலை 5 மணி வரை கோவிலுக்குள் அனுமதிக்கப்படுகிறார்கள். பின்னர் கோவிலின் உள்ளே உள்ள பக்தர்கள் அனைவரும் நள்ளிரவு வரை அத்திவரதரை வழிபடலாம். நாளை  (17-ந் தேதி) அனைத்து தரிசனமும் முழுமையாக ரத்து செய்யப்பட்டு அன்று ஆகம விதிப்படி பூஜைகள் செய்து அத்திவரதர் சிலை அனந்தசரஸ் குளத்தில் வைக்கப்படுகிறது. இதற்கான ஏற்பாடு பணிகள் முடிந்து உள்ளன. இதுவரை அத்திவரதரை 90 லட்சத்துக்கும் மேலான பக்தர்கள் வழிபட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து