முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணிக்கை: அ.தி.மு.க. முகவர்கள் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும்: ஓ.பி.எஸ். - இ.பி.எஸ். வேண்டுகோள்

செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2019      தமிழகம்
Image Unavailable

நடந்து முடிந்த உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. அ.தி.மு.க. வெற்றியை உறுதி செய்யும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், முகவர்கள் அனைவரும் விழிப்புடன் இருந்து பணியாற்ற வேண்டும் என்று அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

தமிழகத்தில் மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர், கிராம ஊராட்சித் தலைவர், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் வாக்குப் பதிவு நடந்து முடிந்துள்ள நிலையில், வரும் 2-ம் தேதி(நாளை) வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. இப்பணிக்காக, அ.தி.மு.க. சார்பில் முகவர்களாக நியமிக்கப்பட்டிருக்கும் கட்சியினர், மிகவும் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்றி வெற்றிக் கனியை சிந்தாமல், சிதறாமல் பெற்று, கழகத்திற்கு அர்ப்பணிக்கும் வகையில் பின்வரும் அம்சங்களை நினைவில் கொண்டு பணியாற்றுங்கள் என்று அன்போடு கேட்டுக் கொள்கிறோம்.

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 2-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தங்களுடைய வாக்கு எண்ணிக்கை மையங்களுக்கு காலை 6 மணிக்கே சென்று விட வேண்டும். வாக்கு எண்ணிக்கை மையங்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் அனைத்தும் முறைப்படி செய்யப்பட்டுள்ளனவா என்பதை உறுதி செய்திட வேண்டும். வாக்குப் பெட்டிகள் மற்றும் வாக்குப் பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பதிவான வாக்குகளும், எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் உள்ளனவா என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும்.

ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடியும் போதும், ஒவ்வொரு வேட்பாளருக்கும் எத்தனை வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை எழுதி வைத்துக் கொண்டு, அதை தேர்தல் அதிகாரியிடம் சரிபார்க்க வேண்டும். அதன் பின்னர்தான் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டுள்ளவர்கள் யாரேனும் மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாகவும், முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என்பதை தீவிரமாக கண்காணித்து, குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வினை காண வேண்டும். தி.மு.க.வினர் தில்லுமுல்லு செய்வதிலும், வன்முறையில் ஈடுபடுவதிலும் கைதேர்ந்தவர்கள் என்பதை இந்த நாடே நன்கு அறியும். இதற்கு பல்வேறு உதாரணங்களை சொல்லலாம். ஆகவே, வாக்கு எண்ணும் மையங்களில் தி.மு.க.வினரால் தில்லுமுல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை விழிப்போடு கண்காணித்து, அவ்வாறு ஏதேனும் நடைபெற முயற்சித்தால், அது சம்பந்தமாக மேலதிகாரிக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும்.

அ.தி.மு.க. சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் தங்களுக்கான வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கையும் நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து வெளியில் வர வேண்டும். கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள தலைமை முகவர்கள், தங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களில், வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகின்றனவா என்பதை இறுதி வரையிலும் கண்காணிக்க வேண்டும்.

சம்பந்தப்பட்ட மாவட்ட அ.தி.மு.க. செயலாளர்கள் இதில் தனிக் கவனம் செலுத்தி, அனைத்துப் பணிகளும் முறையாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்திட வேண்டும். அ.தி.மு.க. வெற்றியை உறுதி செய்யும் வகையிலும், மக்கள் தீர்ப்பு நிலைநாட்டப்படும் வகையிலும், அனைவரும் விழிப்புடன் இருந்து பணியாற்றுங்கள். இது ஜனநாயகப் பயிர் தழைத்தோங்க நாம் ஆற்ற வேண்டிய இன்றியமையாத கடமை என்பதை நினைவில் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறோம். வெற்றி நமதே. இவ்வாறு அந்த அறிக்கையில் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து