முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் நிறைவேற்றப்படுமா? முதல்வர் எடப்பாடி பழனிசாமி பதில்

புதன்கிழமை, 26 பெப்ரவரி 2020      தமிழகம்
Image Unavailable

திருச்சி : தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக தமிழகத்தில் தீர்மானம் கொண்டு வரப்படுமா என்று நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு அரசின் பரிசீலனையில் உள்ளதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

திருச்சி மாவட்டம் முக்கொம்பு பகுதியில் உள்ள அகண்ட காவிரியில் 1836-ம் ஆண்டு ஆங்கிலேயர்களால் மேலணை கட்டப்பட்டது. இதில் காவிரி ஆற்றில் 41 கண் மதகு கொண்ட மேலணையும், வெள்ளப்பெருக்கு ஏற்படும் காலங்களில் உபரி நீரை திறந்து விடும் வகையில் கொள்ளிடம் ஆற்றில் 45 கண் மதகுகள் கொண்ட மேலணையும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 23-ம் தேதி அதிக வெள்ளப்பெருக்கு காரணமாக கொள்ளிடம் தெற்கு மேலணையில் உள்ள 45 மதகுகளில் 6 முதல் 14 வரையிலான 9 மதகுகள் இடிந்து விழுந்து ஆற்றில் அடித்து செல்லப்பட்டது. 630 மீட்டர் நீளமுள்ள மொத்த அணையில் 110 மீட்டர் அளவுக்கு சேதமடைந்து தண்ணீர் வெளியேறியது. மேலணை மதகுகள் உடைந்த பாலம் துண்டானதால் அந்த வழியாக போக்கு வரத்து தடை செய்யப்பட்டது. முக்கொம்பு மேலணை உடைந்த மறுநாளே அங்கு வந்து பார்வையிட்டு ஆய்வு செய்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி , மேலணையில் இருந்து 100 மீட்டர் தள்ளி புதிய கதவணை கட்டுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், முழுமையாக இரண்டு பக்கங்களிலும் காவிரி தவிர்த்து கொள்ளிடத்தில் மட்டும் அணை கட்டப்படும் என்றும் தெரிவித்தார். இந்த அணை ரூ.387.60 கோடி மதிப்பில் கட்டப்படும் என்றும் அவர் தெரிவித்தார். அதன்படி முக்கொம்பில் புதிய அணை கட்டும் பணி கடந்த 6-3-2019 அன்று தொடங்கப்பட்டது. தொடர்ந்து பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வரும் நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று முக்கொம்பு அணை கட்டுமான பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சையில் நேற்று நடைபெற்ற வைத்திலிங்கம் எம்.பி. இல்ல திருமண விழாவில் பங்கேற்று விட்டு திருச்சி வந்த அவர் முக்கொம்பு அணைக்கு சென்று பணிகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். பொதுப்பணித்துறை என்ஜினீயர்களிடம் பணிகள் குறித்த விவரங்களை கேட்ட றிந்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வெள்ளத்தால் இடிந்து விழுந்த முக்கொம்பு கொள்ளிடம் அணைக்கு மாற்றாக புதிதாக ரூ. 387.60 கோடி மதிப்பீட்டில் புதிய கதவணை கட்டப்பட்டு வருகிறது. இப்பணிகளை 31-1-2021க்குள் முடிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 484 பைல்களில் 287 பைல்கள் முடிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 1650மீட்டர் நீளமுள்ள அடித்தளசுவரில் 711 மீட்டர் நீளமுள்ள அடித்தள சுவர் முடிக்கப்பட்டுள்ளன. 1532 மீட்டர் நீளமுள்ள குறுக்கு வெட்டுச்சுவரில் 500 மீட்டர் நீளமுள்ள குறுக்கு வெட்டுசுவர் முடிக்கப்பட்டுள்ளன. மொத்தமுள்ள 7800 எண்ணிக்கையிலான கான்கிரீட் பிளாக்குகளில் (சி சி பிளாக்ஸ்) 1489 கான்கிரீட் பிளாக்குகள் முடிக்கப்பட்டுள்ளன. 55 எண்ணிக்கையிலான மதகு கதவுகளில் 45 மதகு கதவுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் தனியார் நிறுவனத்தினர் இரவு பகல் பாராது பணியாற்றி வருகின்றனர் என்று தெரிவித்தார்.

பின்னர் நிருபர்கள் கேட்ட பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

கேள்வி:- கர்நாடகாவில் மேகதாதுவின் குறுக்கே மீண்டும் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு முயற்சிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளதே?

பதில்:-  காவிரி விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டின்  தீர்ப்பு வந்து விட்டது. காவிரியில் தமிழகத்திற்கு வழங்க வேண்டிய தண்ணீரை தடுக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாது என்று சுப்ரீம் கோர்ட் தெளிவான தீர்ப்பினை கூறிவிட்டது. இதனால் யாரும் அச்சப்பட தேவையில்லை.

கேள்வி:-  காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் திருச்சி, அரியலூர், கரூர் மாவட்டங்களை சேர்க்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளார்களே?

பதில்:-  விவசாயிகள் தரப்பில் இருந்து எனக்கு எந்த கோரிக்கையும் வரவில்லை. ஹைட்ரோ கார்பன், மீத்தேன் வாயு இருக்கும் பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்ததன் அடிப்படையில் தஞ்சை, திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர் மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்துள்ளோம்.

கேள்வி:-  அ.தி.மு.க. ராஜ்யசபா வேட்பாளர்களை முடிவு செய்து விட்டீர்களா?

பதில்:-  தலைமைக்கழகத்தின் மூத்த நிர்வாகிகள் கூடி முடிவு செய்வார்கள்.

தே.மு.தி.க.வுக்கு  எம்.பி. பதவியா?

கேள்வி:-  தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதா, தங்கள் கட்சிக்கு மேல்சபை எம்.பி. வேண்டும் என்று கேட்டுள்ளாரே?

பதில்:-  கேட்பதற்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. எங்கள் கட்சியில் மூத்த தலைவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இருப்பினும் கட்சி தலைமை கூடி இதுபற்றி முடிவு எடுக்கும்.

கேள்வி:- பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு (என்.ஆர்.சி.க்கு) எதிராக தீர்மானம் போட்டுள்ளனரே? அது போல் தமிழகத்திலும் வாய்ப்பிருக்கிறதா?

பதில்:- அவையெல்லாம் அரசின் பரிசீலனையில் உள்ளது.

இவ்வாறு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து