சென்னை : தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று (24.11.2020) தலைமைச் செயலகத்தில், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை சார்பில் கள்ளக்குறிச்சி, திருவாரூர் ஈரோடு, திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி, நாமக்கல், கடலூர் மற்றும் தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 27 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 பாலங்களை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.
மாநிலத்தின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியில் சாலை உள்கட்டமைப்பு வசதிகளின் முக்கியத்துவத்தினை உணர்ந்தும், பெருகி வரும் போக்குவரத்து தேவைக்கேற்ப சாலைகளின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்யவும், மாநிலம் முழுவதும் புதிய பாலங்களை கட்டுதல், தேவையான பகுதிகளில் தரமான சாலைகளை அமைத்தல், சாலைகள் மற்றும் பாலங்களை பராமரித்தல் போன்ற பணிகளை அம்மாவின் வழியில் செயல்படும் தமிழ்நாடு அரசு முனைப்புடன் செயல்படுத்தி வருகிறது.
அந்த வகையில், கள்ளக்குறிச்சி மாவட்டம் - சங்கராபுரம் வட்டம், வெள்ளிமலை - மூலக்காடு -புதூர் சாலையில், லக்கிநாயக்கன்பட்டியில் முஸ்குந்தா ஆற்றின் குறுக்கே 2 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், திருவாரூர் மாவட்டம் - நன்னிலம் வட்டம், மாப்பிள்ளைக்குப்பம் - ஆனைக்குப்பம்- செல்வபுரம் சாலையில், மாப்பிள்ளைக்குப்பத்தில் 2 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், ஈரோடு மாவட்டம் - கோபிசெட்டிபாளையம் வட்டம், பெருந்துறை -மாக்கிணான்கோம்பை சாலையில், மீனவர் காலனியில் 2 கோடியே 91 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், திருப்பூர் மாவட்டம் -திருப்பூர் வடக்கு வட்டம், கவுண்டநாயக்கன்பாளையம் - போயம்பாளையம் சாலையில் கவுண்டநாயக்கன்பாளையத்தில் ஒரு கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் அவிநாசி வட்டம், சேலம் - கொச்சி சாலையில் கிலோ மீட்டர் 110/8-ல் பிரிந்து அவிநாசி – திருப்பூர் - பல்லடம் - பொள்ளாச்சி – கொச்சி சாலையில் கிலோ மீட்டர் 4/2-ல் சேரும் சாலையில் கிலோ மீட்டர் 3/6-ல் பெரியாயிபாளையத்தில் ஒரு கோடியே 95 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும் கட்டப்பட்டுள்ள 2 பாலங்கள், கோயம்புத்தூர் மாவட்டம் - கோயம்புத்தூர் வடக்கு வட்டம், துடியலூர் சின்னதடாகம் சாலையில், இந்திரா நகரில் 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், நீலகிரி மாவட்டம் - உதகமண்டலம் வட்டம், தும்மனட்டி - கூ.மணிஹட்டி சாலையில், தும்மனாடாவில் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், நாமக்கல் மாவட்டம் - இராசிபுரம் வட்டம், சௌரிபாளையம் - பொரசல்பட்டி சாலையில், சௌரிபாளையத்தில் 4 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம், கடலூர் மாவட்டம் - விருத்தாசலம் வட்டம், மாத்தூரில், பூவனூர் - வீரரெட்டிக்குப்பம் சாலையில் கிலோ மீட்டர் 1/2-ல் 2 கோடி ரூபாய் மதிப்பீட்டிலும் மற்றும் கிலோ மீட்டர் 1/4-ல் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலும், காட்டுஒடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள 2 பாலங்கள், தஞ்சாவூர் மாவட்டம் - பட்டுக்கோட்டை வட்டம், பாப்பநாடு - மதுக்கூர் - பெருகவாழ்ந்தான் சாலை, சொக்கனவூரில் 4 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள பாலம் என மொத்தம் 27 கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 11 பாலங்களை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் பி.தங்கமணி, டாக்டர் வி.சரோஜா, தலைமைச் செயலாளர் சண்முகம், நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை முதன்மைச் செயலாளர் கார்த்திக், தலைமைப் பொறியாளர் (கட்டுமானம் மற்றும் பராமரிப்பு) சாந்தி, தலைமைப் பொறியாளர் (நபார்டு மற்றும் கிராமச் சாலைகள்) செல்வன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.