புதுடெல்லி : அடையாறு புற்றுநோய் மருத்துவமனை தலைவர் சாந்தா மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
புகழ் பெற்ற புற்றுநோய் மருத்துவ நிபுணரும், சென்னை அடையாறு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் தலைவருமான டாக்டர் சாந்தா(93). ஏழை, எளிய மக்களுக்கு புற்றுநோய் சிகிச்சை எளிதில் கிடைக்க அரும்பணியாற்றியவர். இதய நோய் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் சாந்தா அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை அவர் உயிரிழந்தார். மேலும் புற்றுநோய் குறித்த ஆராய்ச்சி மற்றும் சிகிச்சைக்காக உலகப்புகழ் பெற்றவர் சாந்தா. அவர் தன்னலமற்ற மருத்துவ சேவைக்காக மகசேசே, பத்ம விபூஷண் போன்ற விருதுகளைப் பெற்றுள்ளார். டாக்டர் சாந்தாவின் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் வைக்கப்பட்டது.
அவரது மறைவுக்கு பாரத பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயர்தர சிகிச்சை அளித்தவர் மருத்துவர் சாந்தா. அவர் எப்போதும் நினைவுக்கூரப்படுவார்.
சென்னை அடையாறில் உள்ள புற்றுநோய் நிறுவனம் ஏழைகளுக்கும் தாழ்த்தப்பட்டோருக்கும் சேவை செய்வதில் முன்னணியில் உள்ளது. 2018-ம் ஆண்டில் நான் சென்னை அடையாறு இன்ஸ்டிடியூட்டிற்கு சென்றதை நினைவு கூர்ந்து பார்த்தேன். டாக்டர் சாந்தாவின் மறைவு வருத்தம் அளிக்கிறது. ஓம் சாந்தி எனப்பதிவிட்டுள்ளார்.