திருப்பதியில் இலவச தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்த தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது
திருப்பதியில் கொரோனா ஊடரங்கு விதிமுறைகளுக்கு உட்பட்டு தினமும் ரூ.300 கட்டண சிறப்பு தரிசனத்தில் 20 ஆயிரம் பக்தர்களும், இலவச தரிசனத்தில் 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் பக்தர்களும், மேலும் ஸ்ரீவாணி அறக்கட்டளைக்கு நன்கொடை வழங்கும் பக்தர்கள் மற்றும் வி.ஐ.பி பிரேக் தரிசனம் என மொத்தம் 40 ஆயிரம் பக்தர்கள் தினமும் தரிசனம் மூலம் சென்று வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பதியில் இலவச தரிசனத்தில் கூடுதலாக 10 ஆயிரம் பக்தர்களை அனுப்ப தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்காக இலவச தரிசன டோக்கன்களின் எண்ணிக்கையை 10 ஆயிரத்திலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தி உள்ளது. தரிசனத்துக்காக முன்பதிவில்லாமல் வரும் பக்தர்கள் நிராசையுடன் திரும்பக் கூடாது என்று தேவஸ்தானம் இந்த முடிவை எடுத்துள்ளது. இதன் மூலம் திருப்பதியில் தினமும் 50 ஆயிரம் பக்தர்கள் வரை தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். சமீப காலமாக திருப்பதி தேவஸ்தானம் குறித்து பல்வேறு வதந்திகள் சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. தேவஸ்தானத்தில் 3 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்புகள் உள்ளதாகவும், அந்த பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும் கடந்த சில நாட்களுக்கு முன்பு தகவல் வெளியானது. இதை நம்பிய பலரும் வேலையில்லா பட்டதாரிகளுக்கு இந்த தகவலை பகிர்ந்துள்ளனர். மேலும் பலர் தேவஸ்தான அதிகாரிகளை தொடர்பு கொண்டு இது குறித்து விசாரித்தனர். இந்நிலையில் தேவஸ்தானத்தில் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக வரும் தகவல் வதந்தி என்று தேவஸ்தானம் தெரிவித்துள்ளது. வேலையில்லா பட்டதாரிகள் இடைத்தரகர்களை நம்பி பணம் அளித்து ஏமாற வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது. இது போன்ற தவறான தகவல்களை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தேவஸ்தானம் திருமலை போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளனர்.