முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெகாசஸ் விவகாரம்: எதிர்க்கட்சிகள் அமளியால் முடங்கியது பாராளுமன்றம்

புதன்கிழமை, 28 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : பாராளுமன்ற இரு அவைகளிலும் பெகாசஸ் உட்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் முற்றிலும் முடங்கின. 

பிரான்ஸைச் சேர்ந்த லாப நோக்கமற்ற அமைப்பான பர்பிடன் ஸ்டோரிஸ் மற்றும் அம்னெஸ்டி இன்டர்நேஷனல் ஆகியவை இணைந்து புலனாய்வு செய்து ஒட்டுக் கேட்பைக் கண்டுபிடித்துள்ளன.   இந்த பெகாசஸ் ஒட்டுகேட்பு விவகாரம் தொடர்பாக பாராளுமன்ற கூட்டுக்குழு விசாரணை நடத்தக் கோரி பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன. பாராளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியது முதலேயே இந்த விவகாரத்தை எழுப்பி எதிர்க்கட்சிகள் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் அவை நடவடிக்கை பாதிக்கப்பட்டு வருகிறது. ஆனால் இந்த விவகாரத்தில் தவறேதும் நடைபெறவில்லை என மத்திய அரசு மறுத்து வருகிறது. பெகாசஸ் மற்றும் விவசாயச் சட்டம் தொடர்பாக பாராளுமன்றத்தில் விவாதிக்க மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்துக்கு கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர். 

இந்தநிலையில் பெகாசஸ் உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர்கள் நேற்று கூடி விவாதித்தனர். காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க, இரு கம்யூனிஸ்ட் கட்சிகள் உள்ளிட்ட பல்வேறு கட்சித் தலைவர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தக்கூட்டத்தில் பெகாசஸ் விவகாரத்தில் மத்திய அரசு பாராளுமன்ற சிறப்புக்குழு விசாரணைக்கு சம்மதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. மேலும் பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைந்து செயல்படுவது பற்றியும் விவாதிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் பெகாசஸ் உட்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மாநிலங்களவையில் இந்த விவகாரம் தொடர்பாக தொடர்ந்து அமளி ஏற்பட்டது.

காலை அவை கூடியதில் இருந்து அடுத்தடுத்து 2 முறை அவை ஒத்திவைக்கப்பட்டது. பின்னர் பிற்பகல் 2.00 மணிவரையிலும் அவை ஒத்திவைக்கப்பட்டது. இதுபோலவே மக்களைவையிலும் பெகாசஸ் விவகாரத்தை எழுப்பி அமளியில் ஈடுபட்டதால் அவை நடவடிக்கைகள் தொடர்ந்து பாதிக்கப்பட்டன. இதனால் மக்களவை இன்று வரை ஒத்திவைக்கப்படுவதாக பேரவை தலைவர் ஓம் பிர்லா அறிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து