முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இன்னும் அதிக நன்மைகளை அடுத்த 15 வருடங்களில் பிரிக்ஸ் உருவாக்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும்: பிரதமர் நரேந்திர மோடி பேச்சு

வெள்ளிக்கிழமை, 10 செப்டம்பர் 2021      இந்தியா
Image Unavailable

அடுத்த 15 வருடங்களில் உலகத்துக்கு அதிக நன்மைகளை செய்வதை பிரிக்ஸ் அமைப்பு உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் மோடி வலியறுத்தியுள்ளார்.

பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்ஆப்பிரிக்கா ஆகிய 5 நாடுகள் இணைந்து ‘பிரிக்ஸ்' கூட்டமைப்பை உருவாக்கி உள்ளது. இந்த அமைப்பின் 13- வது உச்சி மாநாடு காணொலி காட்சி மூலம் நடைபெற்றது. 2012 மற்றும் 2016-ம் ஆண்டுக்கு பிறகு 3-வது முறையாக இந்த ஆண்டின் உச்சி மாநாட்டை இந்தியா தலைமை தாங்கி நடத்தியது.

பிரிக்ஸ்' உச்சி மாநாட்டுக்கு பிரதமர் மோடி தலைமை தாங்குவது இது 2-வது முறையாகும். முன்னதாக 2016-ம் ஆண்டு கோவாவில் நடந்த மாநாட்டுக்கு அவர் தலைமை தாங்கினார்.

இந்த மாநாட்டில் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜின்பிங், பிரேசில் அதிபர் ஜெயிர் போல்சொனாரோ, தென்ஆப்பிரிக்க அதிபர் சிரில் ரமாபோசா ஆகியோர் பங்கேற்றனர். இந்த ஆண்டுக்கான உச்சி மாநாடு, ‘தொடர்ச்சி, ஒருங்கிணைப்பு மற்றும் ஒருமித்த கருத்துக்கான பிரிக்ஸ் உள் ஒத்துழைப்பு’ என்ற கருப்பொருளை மையமாக கொண்டு நடைபெற்றது. ஆப்கன் விவகாரம் உட்பட சர்வதேச விவகாரங்கள் தொடர்பாக இந்த மாநாட்டில் ஆலோசனை நடைபெற்றது.

இந்த மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

பிரிக்ஸ் அமைப்பின் 15-வது ஆண்டு விழாவையொட்டி நடைபெறும் இந்த உச்சி மாநாட்டிற்கு தலைமை வகிப்பது எனக்கும் இந்தியாவுக்கும் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. இன்றைய உச்சி மாநாட்டிற்கான விரிவான செயல்திட்டம் உங்கள் முன்னால் உள்ளது. நீங்கள் ஒப்புதல் அளித்தால் இந்த செயல்திட்டத்தை நாம் ஏற்றுக்கொள்ளலாம். நன்றி, செயல்திட்டம் தற்போது ஏற்றுக்கொள்ளப்பட்டு விட்டது.

இந்த தலைமை பொறுப்பின் போது அனைத்து பிரிக்ஸ் பங்குதாரர்கள் மற்றும் அனைவரிடமிருந்தும் முழு ஒத்துழைப்பை இந்தியா பெற்றது அதற்காக உங்கள் அனைவருக்கும் நான் மிகவும் நன்றி மிகுந்தவன் ஆவேன். கடந்த 15 ஆண்டுகளாக பல்வேறு சாதனைகளை பிரிக்ஸ் தளம் சந்தித்துள்ளது. உலகின் வளர்ந்து வரும் பொருளாதாரங்களுக்கான சக்தி மிகுந்த குரலாக இன்றைக்கு நாம் இருக்கிறோம். வளர்ந்து வரும் நாடுகளின் முன்னுரிமைகள் மீது கவனம் செலுத்துவதற்கும் பயனுள்ளதாக இந்த தளம் விளங்குகிறது.

புதிய வளர்ச்சி வங்கி, எதிர்பாராமல் ஏற்படும் நிகழ்வுகளுக்கான முன்னேற்பாடு மற்றும் எரிசக்தி ஆராய்ச்சி ஒத்துழைப்பு தளம் உள்ளிட்ட வலுவான அமைப்புகளை பிரிக்ஸ் உருவாக்கி உள்ளது. இவை அனைத்தும் மிகவும் வலுவான அமைப்புகள். நாம் பெருமைப்பட நிறைய இருக்கிறது என்பதில் சந்தேகம் ஏதுவுமில்லை. அதே சமயம், நாம் மிகவும் சுய-திருப்தி அடைந்து விடாமல், இன்னும் அதிக நன்மைகளை அடுத்த 15 வருடங்களில் பிரிக்ஸ் உருவாக்குவதை நாம் உறுதி செய்ய வேண்டும்.

இந்த வருடம், கோவிட் ஏற்படுத்திய சவால்களுக்கு இடையிலும் 150-க்கும் அதிகமான பிரிக்ஸ் கூட்டங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன இவற்றில் 20-க்கும் அதிகமானவை அமைச்சர்கள் மட்டத்தில் ஆனவையாகும். பாரம்பரிய துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதோடு, பிரிக்ஸ் செயல்திட்டத்தை மேலும் விரிவாக்கவும் நாம் முயற்சிகளை மேற்கொண்டோம். இதன் காரணமாக முதன்முறையாக பலவற்றை பிரிக்ஸ் சாதித்தது. முதல் முறையாக டிஜிட்டல் பிரிக்ஸ் உச்சி மாநாடு சமீபத்தில் நடைபெற்றது. தொழில்நுட்பத்தின் உதவியுடன் சுகாதார அணுகலை அதிகரிப்பதற்கான புதுமையான நடவடிக்கை இதுவாகும். வரும் நவம்பர் மாதத்தில், பிரிக்ஸ் கூட்டமைப்பின் கீழ் நமது நீர்வள அமைச்சர்கள் முதல் முறையாக சந்திக்க உள்ளார்கள். 'பல்முனை அமைப்புகளை வலுப்படுத்தி, சீர்திருத்துவதற்கான கூட்டு நிலை'-யையும் முதல் முறையாக பிரிக்ஸ் எடுத்துள்ளது.

பிரிக்ஸ் தீவிரவாத எதிர்ப்பு செயல் திட்டத்தையும் நாம் நிறைவேற்றியுள்ளோம். நமது விண்வெளி முகமைகளுக்கு இடையேயான தொலைதூர உணர் செயற்கைக் கோள்களின் கூட்டுஒத்துழைப்புக்கான புதிய அத்தியாயத்தை தொடங்கி உள்ளது. நமது சுங்கத் துறைகளுக்கு இடையேயான கூட்டின் மூலம் பிரிக்ஸ் நாடுகளுக்கு இடையேயான வர்த்தகம் எளிதாக நடைபெறும். மேலும், மெய்நிகர் பிரிக்ஸ் தடுப்பு மருந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை தொடங்குவதிலும் உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. பசுமை சுற்றுலாவுக்கான பிரிக்ஸ் கூட்டு மற்றுமொரு புதிய முன்முயற்சியாகும்.

 

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து