முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அண்ணா பதக்கம், கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 16 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

வீர, தீர செயல்களுக்கான அண்ணா பதக்கம் மற்றும் நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது  பெற தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்களை அனுப்பி வைக்கும்படி தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இது குறித்து தமிழக அரசு விடுத்துள்ள செய்திக்குறிப்பில், வீர, தீரச் செயல்களுக்கான அண்ணா பதக்கம் ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது.   ரூ. ஒரு லட்சத்திற்கான காசோலை, ஒரு பதக்கம் மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.  வீர, தீரச் செயல் புரிந்த தமிழகத்தைச் சேர்ந்த விண்ணப்பதாரர்கள் இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர். பொதுமக்களில் மூவருக்கும், அரசு ஊழியர்களில் மூவருக்கும் பதக்கங்கள் வழங்கப்படும். பதக்கம் பெற வயது வரம்பு ஏதுமில்லை.

2022-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள பதக்கத்திற்குத் தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள் வீர, தீரச் செயல்கள் மற்றும் அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மூலமாகவோ அல்லது https://awards.tn.gov.in என்ற இணைய தளம் மூலமாகவோ அரசு செயலாளர், பொதுத் துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு  15.12.2021-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.  பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு முதல்வரால் 26.01.2022 குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுவர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அரசு விடுத்துள்ள மற்றொரு செய்திக்குறிப்பில், சமுதாய மற்றும் வகுப்பு நல்லிணக்கத்திற்கான கபீர் புரஸ்கார் விருது, ஒவ்வொரு ஆண்டும், தமிழக முதல்வரால் குடியரசு தின விழாவின் போது வழங்கப்படுகிறது. தமிழகத்தில் வசிக்கும் அனைத்து இந்திய குடிமக்களும் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசுப் பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக)  இப்பதக்கத்தினைப் பெறத் தகுதியுடையவராவர்.  இவ்விருதானது, ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன, வகுப்பைச் சார்ந்தவர்களையோ அல்லது அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கலவரத்தின் போதோ அல்லது தொடரும் வன்முறையிலோ காப்பாற்றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படுகிறது. இவ்விருதானது மூன்று அளவுகளில், தலா ஒரு நபர் வீதம் மூவருக்கு வழங்கப்படுகிறது.  முறையே ரூ.20,000/-, ரூ.10,000/- மற்றும் ரூ.5,000/- க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை இதில் அடங்கும்.

2022-ஆம் ஆண்டு, குடியரசு தினத்தன்று வழங்கப்படவுள்ள கபீர் புரஸ்கார் விருதிற்கென தகுதியானவர்களைத் தெரிவு செய்வதற்கான விண்ணப்பங்கள்  அவை தொடர்பான ஆவணங்களுடன் சம்பந்தப்பட்ட மாவட்ட கலெக்டர் மூலமாக அல்லது  https://awards.tn.gov.in/ என்ற இணைய தளம் மூலமாகவோ அரசு செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600 009 என்ற முகவரிக்கு 15.12.2021-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். பதக்கம் பெறத் தகுதியுள்ளவர், இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட தேர்வுக் குழுவால் தெரிவு செய்யப்பட்டு, மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் 26.01.2022 குடியரசு தினத்தன்று பதக்கம் வழங்கி கௌரவிக்கப்படுவர் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து