முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

10 லட்சம் வங்கி ஊழியா்கள் வேலைநிறுத்தம்: நாடு முழுவதும் வங்கி சேவை கடும் பாதிப்பு

வியாழக்கிழமை, 16 டிசம்பர் 2021      இந்தியா
Image Unavailable

மும்பை, டெல்லியில் நடைபெற்ற பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததையடுத்து, வங்கி ஊழியா்களின் இரண்டு நாள்கள் வேலைநிறுத்தம் வியாழக்கிழமை தொடங்கியது. நேற்று தொடங்கியிருக்கும் வேலை நிறுத்தத்தில்,தமிழகத்தில் 80,000 ஊழியா்களும், நாடு தழுவிய அளவில் 10 லட்சம் பேரும் பங்கேற்றுள்ளனர்.

இதனால், நாடு முழுவதும் ரூ.37,200 கோடி மதிப்பிலான 40 லட்சம் காசோலை பரிவா்த்தனைகள் பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுதவிர, வங்கி சேவைகளும் பாதிக்கப்பட்டு, பொதுமக்கள் கடும் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடா்பாக கடந்த பிப்ரவரியில் தாக்கல் செய்யப்பட்ட நிதித்துறை பட்ஜெட்டில் மத்திய அரசு அறிவித்தது. அந்த அறிவிப்பின் கீழ், இரண்டு வங்கிகளை தனியார் வங்கியாக மாற்றுவது தொடா்பான முதல்கட்ட நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதன்படி, இரண்டு பொதுத் துறை வங்கிகளை தனியார் மயமாக்குவது தொடா்பான வங்கிகள் சட்டத் திருத்த மசோதா 2021, பாராளுமன்றத்தில் விரைவில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

இந்நிலையில், பொதுத்துறை வங்கிகளை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, வியாழன் (டிச.16) வெள்ளி (டிச.17) ஆகிய இரண்டு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக வங்கி ஊழியா்கள் சங்கங்களின் கூட்டமைப்பு அறிவித்திருந்தது.

இந்த வேலைநிறுத்தம் தொடா்பாக, கூடுதல் தொழிலாளா் ஆணையா், இந்திய வங்கிகள் கூட்டமைப்பு, வங்கி ஊழியா்கள் கூட்டமைப்பின் நிர்வாகிகள் , நிதித்துறை பிரதிநிதிகள் அடங்கிய பேச்சுவார்த்தை கூட்டம் மும்பையில் சில நாள்களுக்கு முன்பு நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், தனியார் மயமாக்களுக்கான மசோதா தாக்கல் செய்வதை திரும்ப பெற்றால், வேலைநிறுத்த முடிவைத் திரும்பப் பெறுகிறோம் என்று வங்கி ஊழியா் சங்கம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அரசுத் தரப்பில் அதற்கான முனைப்பு காட்டப்படவில்லை.

இதையடுத்து, பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது. மேலும், டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது. இதைத் தொடா்ந்து, திட்டமிட்டப்படி இரண்டு நாள் வேலை நிறுத்தம் நேற்று முதல் தொடங்கியது.

முன்னதாக, இது குறித்து அகில இந்திய வங்கி ஊழியா்களின் சங்கப் பொதுச்செயலாளா் சி.எச்.வெங்கடாசலம் கூறியது: இந்த வேலைநிறுத்தத்தில் தமிழகத்தில் 80,000 ஊழியா்களும், நாடு தழுவிய அளவில் 10 லட்சம் பேரும் பங்கேற்கின்றனா். இதன் காரணமாக, தமிழகத்தில் ரூ.10,000 கோடி மதிப்பிலான 11 லட்சம் காசோலைகளும், நாடு முழுவதும் ரூ.37,200 கோடி மதிப்பிலான 40 லட்சம் காசோலை பரிவா்த்தனைகளும் பாதிக்கப்படும் என்றார்.

வங்கி சேவைகள்: இரண்டு நாள் வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக, வங்கி சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளது. அதேநேரத்தில், இணையவழி சேவைகள் வழக்கமாக நடைபெறும் எனவும், ஏடிஎம்களில் போதிய அளவு பணம் இருப்பு வைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வங்கி நிர்வாகங்கள் தெரிவித்துள்ளன. எனினும் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் காரணமாக நாடு முழுவதும் வங்கி சேவைகள் கடுமையா பாதிக்கப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து