முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குடியரசு தினவிழாவில் தமிழக அலங்கார ஊர்தி பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் : முதல்வர் ஸ்டாலினுக்கு ஓ.பி.எஸ். வலியுறுத்தல்

செவ்வாய்க்கிழமை, 18 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : குடியரசு தின விழாவில் தமிழக அலங்கார ஊர்தி பங்கேற்பதை உறுதி செய்யுமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைபபாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனவரி 26-ம் நாள் இந்தியக் குடியரசு தினமாக டெல்லியிலும் மற்றும் இந்தியாவிலுள்ள மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொண்டாடப்படுகிறது. டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில் ஜனாதிபதி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார்.

இதனைத் தொடர்ந்து இராணுவத்தினரின் வீரசாகசங்கள் நடைபெறும். இதன் தொடர்ச்சியாக, மாநிலங்களின் கலை, கலாச்சாரம், மற்றும் தனித் தன்மையை எடுத்துரைக்கும் வண்ணம் அலங்கார ஊர்திகள் பங்கேற்பது வழக்கம்.

ஆனால், இந்த ஆண்டு டெல்லியில் நடைபெறவுள்ள குடியரசு தின விழாவில், கொரோனா பெருந்தொற்று உள்ளிட்ட பல்வேறு காரணங்களை முன்னிட்டு பங்கேற்கும் மாநிலங்களின் எண்ணிக்கை 12-ஆக குறைக்கப்பட்டு உள்ளதாகவும், தமிழக அரசின் சார்பில் பங்கு பெறவிருந்த அலங்கார ஊர்திக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும், கர்நாடக அரசின் ஊர்திக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் ஊடகங்களில் செய்தி வந்துள்ளது வருத்தத்தினை அளித்துள்ளது.

இரண்டு மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று நோய் காரணத்தைக் காட்டி ஹஜ் புனிதப் பயணத்திற்கு மேற்கொள்ள குறிப்பிட்டுள்ள விமான நிலையங்களின் பெயர் பட்டியலில் சென்னை விமான நிலையத்தின் பெயர் நீக்கப்பட்டது. தற்போது டெல்லியில் நடைபெறும் குடியரசு தின விழாவில், அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகம்  இடம்பெறவில்லை என்ற தகவல் வந்துள்ளது. 

தமிழகத்தினுடைய கலை, கலாச்சாரம், பண்பாடு, விடுதலைப் போராட்டத்தில் தமிழகத்தின் பங்கு ஆகியவற்றை மத்திய அரசிடம் விளக்கி அனுமதியை பெற்றே ஆக வேண்டும்.  பொதுவாக, ஹஜ் பயணிகள் புறப்படுமிடத்தை தேர்வு செய்தல், அலங்கார ஊர்திகளை இடம்பெறச் செய்தல் போன்ற முடிவுகள் எல்லாம் அதிகாரிகள் மற்றும் அதற்கான குழுக்கள் மட்டத்தில் எடுக்கக்கூடிய ஒன்று. 

குடியரசு தின விழா அலங்கார ஊர்தி அணிவகுப்பில் தமிழகத்தை  சேர்ப்பதைப் பொறுத்த வரை, முதல்வர், பிரதமருக்கு விரிவாகக் கடிதம் எழுதியுள்ளார். இதற்கு அ.தி.மு.க. தனது முழு ஆதரவினை நல்கும்.  

தமிழக முதல்வர், இந்தியப் பிரதமரிடம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வருகின்ற குடியரசு தின விழாவில் தமிழகத்தின் சார்பாக அலங்கார ஊர்தி பங்கேற்பதையும், ஹஜ் புனிய யாத்திரைக்கான விமான நிலையப் பட்டியலில் சென்னை சேர்க்கப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க. சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் ஓ.பி.எஸ். தெரிவித்துள்ளார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து