முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டி: வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

செவ்வாய்க்கிழமை, 17 மே 2022      விளையாட்டு
Olympic 2022-05-17

Source: provided

சென்னை : செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் வெற்றி பெற்ற தமிழக வீரர்களுக்கு சென்னை விமான நிலையத்தில் நேற்று உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. 

செவித்திறன் மாற்றுத்திறனாளிகளுக்கான 24-வது கோடைகால ஒலிம்பிக் போட்டி பிரேசில் நாட்டின் கேக்சியாஸ் டோசுல்  நகரில் கடந்த 1- ம் தேதி முதல் 15- ம் தேதி வரை நடைபெற்றது.  இப்போட்டியில்  பங்கேற்ற   இந்திய அணியில்  தமிழகத்தை சார்ந்த  நீச்சல் வீராங்கனை சினேகா, தடகள வீராங்கனை சமீகா பர்வீன் முஜிப், இறகுப்பந்து வீராங்கனை  ஜெர்லின் அனிகா, டென்னிஸ் வீரர் பிரித்வி சேகர், தடகள வீரர்கள் மணிகண்டன் மற்றும் சுதன் ராஜேந்திரன்  ஆகியோர் இடம்பெற்றனர். இக்குழுவினருடன்  டேபிள் டென்னிஸ் பயிற்சியாளர் மூர்த்தி, முதன்மை டென்னிஸ் பயிற்சியாளர் டாக்டர் ஸ்டாலின், நீச்சல்  பயிற்சியாளர்  ஸ்ரீதர் ஆகியோரும்  பிரேசில்  சென்றிருந்தனர்.

இப்போட்டியில் மதுரையைச் சார்ந்த இறகுப்பந்து வீராங்கனை ஜெர்லின் அனிகா மகளிர் ஒற்றையர் பிரிவு, கலப்பு  இரட்டையர் பிரிவுகளில் தங்கம் வென்றுள்ளார். மேலும்   இந்திய அணி சார்பில் குழுப்போட்டியிலும் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இப்போட்டியில் மூன்று தங்கப்பதக்கங்கள் வென்று ஜெர்லின் அனிகா சாதனை படைத்துள்ளார்.

டென்னிஸ் வீரர் பிரித்வி சேகர் ஒற்றையர் பிரிவில் வெள்ளிப்பதக்கமும்,  ஆடவர் இரட்டையர் பிரிவில் வெண்கலப்பதக்கமும் வென்றுள்ளார்.  தடகள வீராங்கனை சமீகா பர்வீன் நீளம் தாண்டுதலில் 9-வது இடமும், மும்முனை தாண்டுதலில்   4-வது இடமும்,  தடகள வீரர் மணிகண்டன் நீளம் தாண்டுதலில் 6-வது இடமும், சுதன் மும்முனை தாண்டுதலில்   4-வது இடமும் பெற்றுள்ளனர்.

போட்டிகளில்   பதக்கங்கள்  வென்ற  ஜெர்லின் அனிகா மற்றும் பிரித்வி சேகர் ஆகியோர் நேற்று  சென்னை, மீனம்பாக்கம் விமான நிலையம் வந்தனர். அவர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில்  விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.  

பின்னர், பிரேசிலில் நடைபெற்ற காது கேளாதோருக்கான 24-வது கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில்  தங்கப்பதக்கங்கள் வென்ற இறகுப்பந்து வீராங்கனை ஜெர்லின் அனிகா,  தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் டாக்டர் இரா. ஆனந்த குமாரை நேற்று தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய தலைமை அலுவலகத்தில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

இந்நிகழ்ச்சியில் மண்டல  முதுநிலை மேலாளர் சுஜாதா, நேரு விளையாட்டு அரங்க மேலாளர் வெங்கடேஷ்,  விடுதி மேலாளர் செந்தில், வேளச்சேரி நீச்சல்  விளையாட்டு அரங்க  அலுவலர் க.பிரேம்குமார், தமிழ்நாடு காது கேளாதோர் விளையாட்டு கவுன்சில் தலைவர் பாலாஜி, பொதுச் செயலாளர் பொன்னுசாமி, சைகை மொழி பெயர்ப்பாளர் சுரேஷ் மற்றும் அரசு அலுவலர்கள்  கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து