முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொடர்ந்து அதிகரிக்கும் தினசரி பாதிப்பு: இந்தியாவில் 4,518 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று

திங்கட்கிழமை, 6 ஜூன் 2022      இந்தியா
India-Corona 2022 03 15

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது தினசரி பாதிப்பு. புதிதாக 4,518 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து 2-வது நாளாக 4 ஆயிரத்திற்கும் அதிகமாக பாதிப்பு பதிவாகியுள்ளது.

இந்தியாவில் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் புதிதாக 4,518 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறி உள்ளது. சுமார் 3 மாதங்களுக்கு பிறகு கடந்த 3-ம் தேதி பாதிப்பு 4 ஆயிரத்தை தாண்டி இருந்தது. மறுநாள் 3,962 ஆக குறைந்தது. ஆனால் நேற்று முன்தினம் 4,270 ஆக உயர்ந்தது. இந்நிலையில் நேற்று பாதிப்பு சற்று அதிகரித்துள்ளது. 

இதில் அதிகபட்சமாக கேரளாவில் 1,544, மகாராஷ்டிராவில் 1,494 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 343, கர்நாடகாவில் 301, அரியானாவில் 148, உத்தரபிரதேசத்தில் 122, தமிழ்நாட்டில் 107 பேருக்கு தொற்று உறுதியாகி உள்ளது. நாட்டில் இதுவரை பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 4 கோடியே 31 லட்சத்து 81 ஆயிரத்து 335 ஆக உயர்ந்தது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டிருப்பது புள்ளி விபரங்களில் தெரியவந்துள்ளது. 

முந்தைய வாரத்தில் சுமார் 17,300 பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு வார பாதிப்பு சுமார் 45 சதவீதம் வரை உயர்ந்துள்ளது. மார்ச் 7-ம் தேதி முதல் 13-ம் தேதி வரையிலான வாரத்தில் பாதிப்பு 25,300 ஆக இருந்தது. அதன்பிறகு படிப்படியாக குறைந்து வந்த நிலையில் 3 மாதங்களுக்கு பிறகு தற்போது ஒரு வார பாதிப்பு மீண்டும் 25 ஆயிரத்தை கடந்துள்ளது. 

தொற்று பாதிப்பில் இருந்து 2,779 பேர் குணமாகி வீடு திரும்பினர். இதுவரை குணமடைந்தவர்கள் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 26 லட்சத்து 30 ஆயிரத்து 852 ஆக உயர்ந்தது. தற்போது சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 25,782 ஆக உயர்ந்துள்ளது. இது நேற்று முன்தினத்தை விட 1,730 அதிகம் ஆகும். கொரோனா பாதிப்பால் மேலும் 9 பேர் இறந்துள்ளனர். இதில் கேரளாவில் திருத்தப்பட்ட பட்டியலில் சேர்க்கப்பட்ட 4 மரணங்கள் அடங்கும். இதுதவிர உத்தரபிரதேசத்தில் 2, மகாராஷ்டிரா, கர்நாடகா, மேற்குவங்கத்தில் தலா ஒருவர் இறந்துள்ளனர். 

மொத்த பலி எண்ணிக்கை 5,24,701 ஆக உயர்ந்துள்ளது. விடுமுறை நாளான ஞாயிறு அன்று நாடு முழுவதும் மக்களுக்கு 2,57,187 டோஸ் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. இதுவரை போடப்பட்ட தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 194 கோடியே 12 லட்சத்தை கடந்துள்ளது. இதற்கிடையே நேற்று முன்தினம் 2,78,059 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தெரிவித்துள்ளது. மொத்த பரிசோதனை எண்ணிக்கை 85.29 கோடியை தாண்டி உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து